பச்சைக்கொடி அசைத்த மோடி! சீறி பாய்ந்து கிளம்பிய காந்திநகர்-மும்பை வந்தே பாரத் ரயில்! டாப் ஸ்பீட் 160
காந்திநகர்: இந்தியாவின் 3வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை குஜராத் மாநிலம் காந்திநகரில் இருந்து மும்பை சென்ட்ரல் இடையே இன்று பிரதமர் நரேந்திர மோடி பச்சை கொடியசைத்து துவக்கி வைத்தார். வந்த பாரத் 2.0 என கூறப்படும் இந்த ரயில் பெட்டிகள் சென்னையில் தயாரிக்கப்பட்டது. இந்த ரயில் 129 வினாடியில் டாப் ஸ்பீடான 160 கிலோமீட்டர் வேகத்தை எட்டும். இதுதவிர பல்வேறு அதிநவீன சிறப்பு வசதிகள் உள்ளன.
இந்தியாவின் ரயில்வே உள்கட்டமைப்புகளை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
இதில் ஒன்று தான் ‛வந்தே பாரத்' திட்டம். பிரதமர் மோடியின் கனவு திட்டமாக ‛வந்தே பாரத்' உள்ளது. இதன்மூலம் இந்தியாவின் 75 நகரங்களை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

துவக்கி வைத்த பிரதமர் மோடி
அதன்படி இன்று குஜராத் மாநிலம் காந்தி நகரில் இருந்து மும்பை சென்ட்ரல் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிஸ் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். அதன்பிறகு ரயிலில் ஏறி பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத் வரை பயணித்தார். அதோடு ரயிலில் பிரதமர் மோடி ஆய்வு செய்தார். ரயில் உள்ள புதிய தொழில்நுட்பம், இயங்கும் முறை பற்றி அதிகாரிகள் பிரதமர் மோடியிடம் எடுத்து கூறினர்.

3வது வந்தே பாரத் ரயில்
இந்த ரயில் நாட்டில் இயக்கப்படும் 3வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலாகும். இதற்கு முன்பு டெல்லி - வாரணாசி, டெல்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா இடையே 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவை துவங்கி நடைபெற்று வருகிறது. அதன்பிறகு தற்போது காந்திநகர்-மும்பை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இதன்மூலம் காந்தி நகர்-மும்பை இடையேயான பயண நேரம் என்பது 2 மணிநேரம் வரை குறைய உள்ளது.

160 கிலோமீட்டர் வேகம்
இந்த ரயில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படவுள்ளது. வெறும் 129 வினாடியில் இந்த ரயில் 160 கிலோமீட்டர் வேகத்தை எட்டும். மேலும் தற்போதைய ரயில் இதற்கு முந்தைய ரயில்களை விட கூடுதல் வேகத்துடன் இயங்க உள்ளது. முந்தைய வந்தே பாரத் ரயில்கள் 100 கிலோமீட்டர் வேகத்தை அடைய 54.6 வினாடிகள் எடுத்த நிலையில் இந்த ரயில் 52 வினாடியில் அந்த வேகத்தை எட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தயாரிப்பு
மேலும் முந்தைய ரயில்களை காட்டிலும் இது 38 டன் எடை குறைக்கப்பட்டுள்ளது. தற்போதைய ரயில் 392 டன் எடை கொண்டதாகும். இத்தகைய நவீன தொழில்நுட்ப அப்கிரேட் காரணமாக தான் தான் இது வந்தே பாரத் 2.0 என அழைக்கப்படுகிறது.மேலும் இந்த ரயிலில் எக்ஸிகியூட்டிவ் பெட்டிகளில் உள்ள இருக்கைககள் 180 டிகிரி அளவுக்கு சுழலும் வகையில் உள்ளது. சேர் கார் வசதி உள்ளது. கண்காணிப்பு கேமரா வசதி உள்ளது. மேலும் 400 மிமீ முதல் 650 மிமீ உயரம் வரை ரயில் பாதையில் தண்ணீர் இருந்தாலும் இந்த ரயில் பாதுகாப்பாக இயங்கும். இதுதவிர ஆட்டோமேட்டிக் கதவுகள், 34 இன்ச் எல்சிடி டிவி வசதிகள் உள்ளன. இந்த ரயிலின் பெட்டிகள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டது. இந்த பெட்டிகள் சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications