நான்கு நாள் பயணமாக மலேசியா, சிங்கப்பூர் சென்றார் பிரதமர் மோடி
டெல்லி: நான்கு நாள் அரசு முறை பயணமாக மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு கிளம்பிச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி
ஆசிய நாடுகளில் ஒன்றான மலேசியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் நஜிப் ரஸாக் மற்றும் அந்நாட்டு மூத்த தலைவர்களுடன், இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார். இதன் பின்னர் பல்வேறு ஒப்பந்தங்களில், இரு நாடுகளின் தலைவர்களும் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறும் இந்தியா- ஏசியான்- கிழக்கு ஆசியா நாடுகளின் உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். இம்மாநாட்டில், பயங்கரவாத ஒழிப்பு, முறையற்ற குடியேற்றம், தென்சீன கடல் பிராந்திய பிரச்னைகள், கொரியா பிராந்திய சூழ்நிலை உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்பட உள்ளன.
கோலாலம்பூரில் நாளை மாலை, மலேசிய சர்வதேச கண்காட்சி அரங்கில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் பிரமாண்ட வரவேற்பளிக்கின்றனர். அப்போது மலேசியா வாழ் இந்தியர்களிடையே பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். மேலும் கோலாலம்பூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் சுவாமி விவேகானந்தர் சிலையையும் மோடி திறந்து வைக்க உள்ளார்.
இதையடுத்து நவ.24-ந் தேதியன்று சிங்கப்பூரிலும் இந்தியர்கள் பிரமாண்ட பிரதமர் மோடிக்கு வரவேற்பளிக்க உள்ளனர். இதன் பின்னர் மலேசியா, சிங்கப்பூர் பயணத்தை நிறைவு செய்து விட்டு நாடு திரும்புகிறார் பிரதமர் மோடி. அண்மையில் இங்கிலாந்து சென்ற பிரதமர் மோடிக்கு வெம்பிளே மைதானத்தில் 60 ஆயிரம் இந்தியர்கள் பிரமாண்ட வரவேற்பளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications