மோடியைச் சந்தித்தார் மன்மோகன் சிங் - பொருளாதாரம் பற்றி விவாதித்ததாக காங்கிரஸ் தகவல்
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜகவின் ஓராண்டு கால ஆட்சியை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வரும் சூழலில், திடீரென பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.
மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஓராண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. இந்த ஓராண்டில் பாஜக தனது சாதனைகளைப் பட்டியலிட்டு வருகிறது. அதேசமயம், பாஜக ஆட்சியின் ஏமாற்றத்தை காங்கிரஸ் கட்சி விமர்சித்து வருகிறது. இதனால் இரண்டு கட்சிகளும் ஒன்றையொன்று சரமாரியாக தாக்கி பேசி வருகின்றன.
இந்நிலையில், பாஜக அரசின் நடவடிக்கைகளை கடுமையாக சாடிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அடுத்த சில மணி நேரங்களிலேயே பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார்.டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள பிரதமர் இல்லத்திற்கு நேரில் சென்ர மன்மோகன் சிங், அங்கு மோடியைச் சந்தித்து பேசினார்.
Very happy to meet Dr. Manmohan Singh ji & welcome him back to 7RCR. We had a great meeting. pic.twitter.com/GlpfqKByoS
— Narendra Modi (@narendramodi) May 27, 2015
இந்த சந்திப்பு தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டுள்ள மோடி, ‘திரு. மன்மோகன் சிங் அவர்களை வரவேற்று பேசியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
மோடி-மன்மோகன் சிங் திடீர் சந்திப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், பொருளாதாரம் பற்றி விவாதிப்பதற்காகவே மன்மோகனை பிரதமர் அழைத்ததாக கூறியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த சர்மா கூறுகையில் "பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கை பற்றி விவாதிக்கவே மன்மோகன் சிங்கை மோடி அழைத்திருந்தார்" என தெரிவித்துள்ளார்.