"ஸ்டார்ட் அப் இந்தியா" இளைஞர்களின் திறனை ஊக்கப்படுத்தும் - திட்டத்தை தொடங்கி வைத்து மோடி பேச்சு
டெல்லி: "தொடங்கிடு இந்தியா... எழுந்திடு இந்தியா" அதாவது "ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா" என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் பொருட்டு ஸ்டார்ட்அப் இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று துவக்கி வைத்து அது குறித்த திட்ட அறிக்கையை வெளியிட்டார்.
பின்னர் மாநாட்டில் பேசிய மோடி, இந்தியாவின் எண்ண ஓட்டத்தை மாற்றுவோம். இங்குள்ள சிவப்பு நாடா முறையை ஓழிப்பது தான் எனது நிர்வாக பாணி. என்றும் வரி சீரமைப்பில் வெளிப்படைத் தன்மை இருக்கும். புகழ் பெறுவதற்காகவும், பணம் சம்பாதிப்பதற்காகவும் இந்த திட்டம் துவங்கப்படவில்லை. இந்த திட்டத்தின் நோக்கம் அதற்கு அப்பாற்பட்டது.
மாற்றமே இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக உள்ளது. அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு ஒரு ஆப்ஸ்களில் கிடைக்கிறது. இதனை நான் உணர்ந்துள்ளேன். நானும் நரேந்திரமோடி ஆப் என ஒன்றை வைத்துள்ளேன்.இதில் முக்கிய தகவல்கள் மக்களுக்கு பகிரப்பட்டுள்ளது.உங்களின் அனுபவங்களை இதில் பகிர்ந்து கொள்ளலாம். விவசாயிகளுக்கு உதவும் வகையிலான ஆப்களை கண்டுபிடிக்க வேண்டும்.
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம், இந்தியாவில் உள்ள இளைஞர்களின் திறமையைக் கொண்டாடும். துணிச்சலான முயற்சிகள் தான் ஸ்டார்ட் ஆப் திட்டத்திற்கு வெற்றி கிடைக்க வழி வகுக்கும். இங்கு இருக்கும் உங்களுக்கு இருக்கும் திறமை எனக்கும் கிடைக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டியதுண்டு.
இதன்மூலம் தொழில்துறையில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் கடன் வசதி, தொழில் முனைவோருக்கான உதவிகள், புதிய தொழில் வாய்ப்புகள் போன்றவற்றை உருவாக்கி தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு இளம் தொழில் முனைவோர்கள், பன்னாட்டு நிறுவனங்களின் சிஇஓக்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறுகையில், அடுத்த பட்ஜெட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஏற்ற வரிச் சூழல் வெளியாகும் என்று தெரிவித்தார். இதன் மூலம் மேலும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஏற்ற சூழல் உருவாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தொழில் முனைவோருக்கு உகந்த வரிச் சூழலை ஏற்படுத்துவதற்கான வழி முறைகள் காணப்பட்டுள்ளன. இதன் அடுத்தகட்டமாக வரிச் சூழலுக்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகும். சாதகமான வரிச் சூழல் நிலவியபோதிலும் அதை சட்ட ரீதியாக வெளியிட வேண்டியுள்ளது. அதை நிதி மசோதாவாகக் கொண்டு வந்து சட்டமாக்குவதன் மூலமே நடைமுறைப்படுத்த இயலும். எனவே ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கேற்ற வரிச் சூழல் குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என்று ஜேட்லி கூறினார்