அரசியல் தந்திரத்தை விடுங்கள்.. தெலுங்கானா போல் தீயாய் வேலை செய்யுங்கள்... கே.எஸ்.ஆரை பாராட்டிய மோடி!
அரசியல் தந்திரத்தை கைவிடுங்கள், தெலுங்கானா போல் வேலை செய்யுங்கள் என்று அதன் முதல்வர் சந்திரசேகர் ராவை மோடி பாராட்டினார்.
டெல்லி: அரசியல் தந்திரத்தையெல்லாம் மூட்டை கட்டி வையுங்கள், தெலுங்கானா போல் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துங்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெலுங்கானா முதல்வரை பாராட்டினார்.
ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்காத மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். அப்போது தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.
இதன் மீதான பதில் உரையை பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் முன்வைத்தார். அப்போது அவர் கூறுகையில் ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற முடிவு செய்தார்.
உள்கட்சி பகை
அப்போதே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வைத்த பொறியில் சிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனர். அதையும் மீறி வெளியேறினர். தற்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததும் தெலுங்கு தேசத்துக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கும் இடையே உள்ள உள்கட்சி பகைதான்.
முயற்சி
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தெலுங்கானாவில் முதிர்ச்சியுடன் செயல்படுகிறது. பாஜகவுடன் பாலமாக இருந்து வருகிறது. அதன்படி அவர்களது மாநிலத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார் சந்திரசேகர ராவ்.
கண்ணும் கருத்துமாக
எனவே நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற அரசியல் தந்திரங்களில் இறங்காமல் ஆந்திரத்தை எப்படி வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வது என்பதில் கண்ணும் கருத்துமாக இருங்கள் என்று அறிவுறுத்தினார்.
ஆந்திரத்துக்கு கண்டனம்
பாஜக, காங்கிரஸ் அல்லாத 3ஆவது அணிக்கு சந்திரசேகர ராவ் முயற்சித்து வருகிறார். இந்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் விவகாரத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிக்கு பாராட்டு தெரிவித்து ஆந்திரத்தை கண்டித்த விவகாரம் பெரிதும் பேசப்படுகிறது.