நரேந்திர மோடியின் வாரணாசிப் பயணம் ”திடீர்” ரத்து!
வாரணாசி: பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
வாரணாசி தொகுதி எம்.பியாக இருப்பவர் மோடி. அவர் வாரணாசியில் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்வதாக இருந்தது. ஆனால் அந்த பயணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை உத்தரபிரதேச மாநில பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் சிவக்குமார் பதக் தெரிவித்தார். பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து பிரதமர் அலுவலகம் தகவல் அனுப்பியுள்ளது. பிரதமரின் சுற்றுப்பயண தேதி பின்னர் மீண்டும் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பிரதமரான பின்னர் இதுதான் வாரணாசிக்கு அவரது முதல் பயணமாகும். ஆனால் அது தற்போது ரத்தாகியுள்ளது. பிரதமரின் பயணம் ரத்தாகியுள்ளதை உ.பி. தலைமைச் செயலாளர் அலோக் ரஞ்சனும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஹூட்ஹூட் புயல் காரணமாக ஆந்திரா, ஒடிஷா மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தனது பயணத்தை மோடி ரத்து செய்துள்ளதாக தெரிகிறது.
தனது வாரணாசி பயணத்தின்போது பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே மோடி உரையாற்றுவதாக இருந்தது.