ஒரே நாடு, ஒரே புகைப்படம்.. "மோடி இங்கே, திரெளபதி முர்மு போட்டோ எங்கே?" காங்கிரஸ் கிண்டல்!
மணிப்பூர்: மணிப்பூர் சென்றுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவை வரவேற்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள போஸ்டரில் பிரதமர் மோடியின் புகைப்படம் மட்டும் இடம்பெற்றுள்ளதை காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பாஜக கூட்டணி சார்பாக ஒடிசா மாநில பழங்குடியின பெண்ணான திரெளபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மறுபக்கம் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யஷ்வந்த் சின்ஹா போட்டியிட்டுள்ளார். இருவரின் வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளை இரு வேட்பாளர்களும் சந்தித்து வருகின்றனர்.
இந்தத் தேர்தலில் வெற்றிபெற பாஜக வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு கூடுதலாக 20 ஆயிரம் வாக்குகள் மட்டுமே தேவை என்ற நிலையில், ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சர் நவீன் பட்நாயக் மற்றும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் ஆதரவளித்துள்ளனர். இதுமட்டுமல்லாமல், அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவளித்துள்ள நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மு வெற்றிபெறுவார் என்று கூறப்படுகிறது.
இருந்தும் தமிழ்நாடு, புதுச்சேரி, ஒடிசா என அடுத்தடுத்து பல்வேறு கட்சிகளிடமும் திரெளபதி ஆதரவு கோரி பயணம் மேற்கொண்டுள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் திரெளபதி பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்த நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள முதலமைச்சர் பைரன் சிங், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரி திரெளபதி பயணித்துள்ளார்.
இவரை வரவேற்கும் வகையில், மணிப்பூர் மாநில பாஜக சார்பாக பல்வேறு பகுதிகளில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. திரெளபதி முர்முவின் புகைப்படம் இல்லாமல், அவரின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதனை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, அந்த பேனர் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு கிண்டல் செய்துள்ளது.
அதில், ஒரு நாடு, ஒரே வரி என்பது போல் ஒரே நாடு, ஒரே புகைப்படம் என்று பாஜகவின் கொள்கையை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பில் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.