சட்டசபை தேர்தல்: 5 முனை போட்டியால் பாமகவுக்கு சாதகம்; சொல்கிறார் அன்புமணி !
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் ஐந்து முனை போட்டி நிலவுவது பா.ம.க.வுக்கு சாதகமான சூழல் என்று அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடந்தது. இந்த கூட்டத்தில் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் பாமகவின் வெற்றி வாய்ப்பு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். இதில் கட்சித் தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணித் தலைவரும் பாமகவின் முதல்வர் வேட்பாளருமான அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி கூறுகையில், பாமகவின் வெற்றி வாய்ப்பு குறித்தும், அடுத்த கட்டமாக மக்களை அணுகுவது குறித்தும் நேற்று சென்னையில் நடைபெற்ற மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. மக்களின் ஆதரவு இருப்பதால் தேர்தலை தன்னம்பிக்கையுடன் அணுக உள்ளோம்.
கடந்த சட்டப் பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் திமுகவுக்கு 3-ஆவது இடமே கிடைத்தது. அதிமுக மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். பாமக சார்பில் நடைபெற்ற கருத்துக் கணிப்பில் 82 சதவீத இளைஞர்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகத் தெரிய வந்துள்ளது என்றார் அன்புமணி. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாமகவுக்கு எந்த கூட்டணியும் தேவை இல்லை என்றார்.
மேலும், தமிழகத்தில் நிலவி வந்த மாற்றுக்கட்சிக்கான வெற்றிடத்தை பா.ம.க நிரப்பியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் ஐந்து முனை போட்டி நிலவுவது பா.ம.க.வுக்கு சாதகமான சூழலாக அமைந்துள்ளது என்று அன்புமணி கூறினார்.