தூங்கா நகரமாகும் பெங்களூர்: நள்ளிரவு 1 மணி வரை பார்கள்- உணவகங்கள் திறந்திருக்க அனுமதி
பெங்களூர்: பெங்களூருவில் தினசரி நள்ளிரவு 1 மணிவரை உணவகங்கள் திறந்திருக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் தூங்கா நகரமாக மாறிவருகிறது பெங்களூரு.
பெங்களூருவில் உணவகங்கள், மதுபான விடுதிகளை நள்ளிரவு வரை திறந்திருக்க அனுமதி வழங்கி கர்நாடக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.
இந்த நிலையில், பெங்களூரில் ஜூன் 10-ந்தேதி முதல் உணவகங்கள் நள்ளிரவு 1 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த உத்தரவு அடுத்த ஆண்டு (2015) ஜூன் 30-ந் தேதி வரை அமலில் இருக்கும். இதற்கான உத்தரவை பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் ராகவேந்திரா அவுராத்கர் பிறப்பித்து உள்ளார்.
கடந்த மூன்று மாதங்களாக வார இறுதி நாட்களில் மட்டும் சோதனை அடிப்படையில் நள்ளிரவு 1 மணிவரை பார்கள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதன்மூலம் குற்றச்செயல்கள் எதுவும் அதிகரிக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இதனையடுத்து தினசரி நள்ளிரவு 1 மணிவரை உணவு விடுதிகள், பார்கள் திறந்திருக்க அனுமதி அளித்து பெங்களூரு காவல்துறை உத்தரவிட்டுள்ளது.