உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் 90 லட்சம் பேர் மரணம்- அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை
சுற்றுச்சூழல் மாசுபாட்டால் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் உலகம் முழுவதும் 90 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர்.
டெல்லி : காற்று மாசுபாட்டால் கடந்த 2015-ம் ஆண்டு மட்டும் 90 லட்சம் பேர் உலகம் முழுவதும் மரணமடைந்திருக்கிறார்கள் என்று மருத்துவ ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்து உள்ளது.
2015-ம் ஆண்டில் மட்டும் காற்று, நீர் மாசுபாடுகளால் உருவான நோய்களால் மட்டும் உலகம் முழுவதும் 90 லட்சம் பேர் மரணமடைந்திருக்கிறார்கள். எய்ட்ஸ், மலேரியா என இன்னும் பல ஆட்கொல்லி நோய்களின் இறப்பு விகிதத்தைக் காட்டிலும் இது அதிகம் என்கிறது லாண்டெக் மருத்துவ ஆய்வறிக்கை.
இந்த எண்ணிக்கையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து இருக்கிறது சீனாவும், இந்தியாவும். இந்த இரண்டு நாடுகளில் இருந்து மட்டும் 54 லட்சம் பேர் மாசுபாடு காரணமாக உயிரிழக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. உலகில் ஏற்படும் மரணங்களில் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மட்டும் 16% மரணங்கள் நிகழ்கின்றன.
எய்ட்ஸ், மலேரியா, காசநோய் ஏற்படுத்தும் மரணங்களைக் காட்டிலும் இது மூன்று மடங்கு அதிகம். போர், பஞ்சம், வன்முறை காரணமாக ஏற்படும் மரணங்களோடு ஒப்பிடுகையில் இந்த அளவு மிகவும் அதிகம். விபத்துகளால் இறப்பவர்களைக் காட்டிலும் ஆறு மடங்கு அதிகமான எண்ணிக்கையில் மாசுபாட்டால் மக்கள் இறக்கிறார்கள்.
அதிகம் மாசுபட்ட நாடுகளில் நான்கில் ஒருவர் இதுதொடர்பான நோய்களால் இறக்கிறார் என்கிறது அந்த அறிக்கை. வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகளில் தான் இந்த பாதிப்பு அதிகம். ஆனால், இதைப்பற்றி எந்த ஒரு அரசியல் தலைவர்களும் கவலை கொள்வது இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மாசுபாட்டால் ஏற்படும் 70% நோய்கள் தொற்றுவியாதி அல்ல. அதனால், இதைப்பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாக இருக்கிறது. இந்தியா, சீனா நகரங்களில் வாகனப் புகை, தொழிற்சாலை கழிவுகளில் இருந்து அதிக அளவு மாசுபாடு ஏற்படுவதாகவும் அதனால் மரணங்களும அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
டெல்லி, பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு மிகவும் ஆபத்தானது என்றும், மக்கள் இன்னும் மோசமான நிலையில் பாதிக்கப்படுவார்கள் என்றும் அதற்கான சுகாதாரக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாமல் இருக்கிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.