சொத்துக் குவிப்பு கேஸ்: ஆயிரக்கணக்கில் அரசு நிலத்தை வளைத்து போட்ட ஜெயலலிதா- அரசு வக்கீல்
பெங்களூர்: தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது அரசு அதிகாரிகளை பயன்படுத்தி குறைந்த விலையில் பல்வேறு இடங்களில் நிலங்களை வாங்கியுள்ளதாக அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங் கூறினார்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஜான்மைக்கல் டிகுணா முன் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகாமல் இருக்க விலக்கு அளிக்கக் கோரி அவர்களது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக தனது வாதத்தை அரசு வழக்கறிஞர் பவானிசிங் தொடர்ந்தார்.
இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளவர்களில் 20 பேரின் சாட்சியங்களை அடிப்படையாக வைத்து வாதம் செய்தார்.
அவர் கூறுகையில், வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அரசு அதிகாரிகளை பயன்படுத்தி விவசாயிகள் பயன்படுத்தி வந்த நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கியுள்ளார். ராஜகோபால் என்ற சார்-பதிவாளரை பயன்படுத்தி பல இடங்களில் அரசு நிலங்கள் வாங்கி மெடோ ஆக்ரோபாரம், லெக்ஸ் பிராபர்ட்டிஸ் உள்பட பல நிறுவனங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுதாகரன், இளவரசி, சசிகலா
வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள சுதாகரன், இளவரசி ஆகியோர் பெயரில் நிலம் பதிவு செய்துள்ளதுடன், இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலாவின் நேரடி பார்வையில் நிலம் வாங்கியதை சாட்சிகள் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான ஏக்கர்கள்
நெல்லை மாவட்டத்தில் மட்டும் ராதாகிருஷ்ணன் என்பவர் மூலம் சுமார் 1,190 ஏக்கர் நிலம், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கொட்டிவாக்கம், நீலாங்கரை, சிறுதாவூர், ஊத்துகோட்டை ஆகிய பகுதிகளில் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் குறைந்த விலைக்கு வாங்கி பதிவு செய்துள்ளனர்.
தனியார் ரியல் எஸ்டேட்
சென்னையை அடுத்த வாலாஜபாத் பகுதியில் உள்ள ராஜாராம் என்ற ரியல் எஸ்டேட் அதிபர் மூலம் சிலருக்கு சொந்தமான 600க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் வாங்கி குவித்துள்ளனர்.
கொடநாட்டில் விவசாயம்
கொடநாட்டில் 300 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்யப்பட்டுள்ளதை சாட்சியாளர்கள் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளனர். வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளவர்களின் பொருளாதார நிலைக்கும், அவர்கள் வாங்கி குவித்துள்ள நிலங்களுக்கும் துளியும் சம்மந்தமில்லை. இவை அனைத்தும் வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்துள்ளதன் மூலம் வாங்கப்பட்ட நிலங்கள் என்பது சாட்சியங்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
சிறுதாவூர் பண்ணைத் தோட்டம்
சிறுதாவூரில் 25 ஏக்கர் நிலத்தில் பண்ணை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அரசு வழக்கறிஞர் ஆதாரத்துடன் விளக்கினார் அரசு வழக்கறிஞர். இதைத்தொடர்ந்து இன்றும் வழக்கின் விசாரணை நடைபெற்றது.
லெக்ஸ் பிராபர்ட்டீஸ் மனு தள்ளுபடி
இதனிடையே சொத்து குவிப்பு வழக்கில் இருந்து லெக்ஸ் பிராபர்ட்டிஸ் டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் கடந்த 10 நாட்களுக்கு முன் தனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் வழக்கில் இருந்து தங்கள் நிறுவனத்தை விடுவிக்க வேண்டும். அதுவரை பிரதான வழக்கு விசாரணை நடத்தாமல் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
ரூ.10000 அபராதம்
அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, நீதிமன்ற நேரத்தை வீணாக்கியதற்காக ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்தும்படி லெக்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார். திங்களன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, லெக்ஸ் கம்பெனி தொடர்பாக கடந்த 22ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வழக்கறிஞர் குலசேகரன் படித்து காட்டினார். அதை ஏற்க மறுத்த நீதிபதி நான் விதித்த ரூ.10 ஆயிரம் அபராதத்தை முதலில் கட்டுங்கள் என்று உத்தரவிட்டார். நீதிபதியின் உத்தரவை ஏற்று அபராத தொகை கம்பெனி சார்பில் செலுத்தப்பட்டது.
மெடோ ஆக்ரோ பாரம் நாளை தீர்ப்பு
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து மெடோ ஆக்ரோ பாரம் கம்பெனியை விடுவிக்கக் கோரி அந்த நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. இந்த நிறுவனம் தொடர்பான மனு மீதான தீர்ப்பை வரும் 26ம் தேதி வழங்குவதாக கூறி நீதிபதி ஒத்திவைத்தார்.