திருமணத்துக்கு முன் பாலுறவு தவறானது: டெல்லி கோர்ட்டு தீர்ப்பு
டெல்லி: ‘திருமணத்துக்கு முன் ‘செக்ஸ்' உறவு வைப்பது நீதிக்கு புறம்பானது. இதை எந்த மதமும் ஏற்காது'' என டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
பஞ்சாபை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அலுவலகத்தில் பணிபுரிந்தார். அப்போது தன்னுடன் வேலை பார்த்த 29 வயது வாலிபருடன் நட்புடன் பழகினார். அப்போது திருமணம் செய்வதாக வாலிபர் அளித்த உறுதி மொழியின் பேரில் அவருடன் அப்பெண் பல முறை உறவுவைத்துக் கொண்டார்.
அதன் பிறகு அப்பெண்ணை திருமணம் செய்ய வாலிபர் மறுத்து விட்டார். எனவே, அப்பெண் போலீசில் அளித்த புகாரின் பேரில் அவர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் நடந்தது.
இந்த வழக்கு விசாரணை டெல்லி கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் நீதிபதி வீரேந்தர் பட் முன்னிலையில் நடந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், பலாத்கார குற்றம் சாட்டப்பட்ட வாலிபர் விடுதலை செய்யப்பட்டார்.
தீர்ப்பில் நீதிபதி வீரேந் தர்பட் கூறியதாவது:-
ஒரு பெண் வளர்ந்து கல்வி கற்று பின்னர் அலுவலகத்துக்கு பணிக்கு செல்லும் போது நண்பருடனோ அல்லது உடன் பணிபுரியும் வாலிபருடனோ பழக்கம் ஏற்படுகிறது.
சக ஊழியருடன் பெண் நெருங்கி பழகும் போது அவர் திருமணம் செய்வதாக அளிக்கும் வாக்குறுதியை நம்பி அவருடன் பாலுறவு கொள்வது தனக்கு தானே ஆபத்தை தேடிக் கொள்வதாகும்.
ஒரு வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக கூறும் வாக்குறுதிக்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை அப்பெண் கவனத்தில் கொள்ள வேண்டும். என்றாலும், திருமணத்துக்கு முன் உறவு கொள்வது நீதிக்கு புறம்பானது இதை எந்த மதமும் அனுமதிக்கவில்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.