27ம் தேதி வாஜ்பாயின் வீட்டுக்கே சென்று பாரத ரத்னா விருது வழங்கும் பிரணாப் முகர்ஜி
டெல்லி: வரும் 27ம் தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்படுகிறது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயி மற்றும் சுதந்திர போராட்ட வீரர் மதன் மோகன் மாலவியா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. மாலவியாவின் 153வது பிறந்தநாளுக்கு முந்தைய நாள் மத்திய அரசின் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் வரும் 27ம் தேதி பாரத ரத்னா விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்க உள்ளார். அவர் முதுமையால் வெளியே வராமல் இருக்கும் வாஜ்பாயின் வீட்டிற்கே சென்று அவருக்கு விருதை வழங்கி கௌரவிக்கிறார்.
வழக்கமாக பாரத ரத்னா விருது வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் தான் நடைபெறும். ஆனால் இம்முறை வழக்கத்திற்கு மாறாக குடியரசுத் தலைவர் வாஜ்பாயின் வீட்டிற்கு சென்று விருது வழங்குகிறார்.
விஞ்ஞானி சி.வி. ராமன், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பாடகி லதா மங்கேஷ்கர் உள்ளிட 43 பேருக்கு இதுவரை பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கிற்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.