குடியரசு தலைவர் தேர்தல்.. சோனியா, மன்மோகனுக்கு போன் போட்டு ஆதரவு கேட்ட மோடி
டெல்லி: பாஜகவின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். பீகார் ஆளுநராக உள்ள இவர் பாஜகவின் தலித் இன தலைவர்களில் ஒருவராகும். இவரை வேட்பாளராக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அறிவித்த சில நிமிடங்களிலேயே அவருக்கு ஆதரவு திரட்ட ஆரம்பித்தார் பிரதமர் மோடி.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிடமும் ஆதரவு கேட்டார் மோடி.

எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் திமுகவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி உட்பட எதிர்க்கட்சியினர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவில் அதிமுகவை சேர்ந்தவர்கள் இடம்பிடிக்கவில்லை.
என்னதான் தலித் பிரிவை சேர்ந்தவராக இருந்தாலும், ராம்நாத் கோவிந்த், வலதுசாரி சிந்தனையுள்ளவர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தீவிர விசுவாசியாக இருந்தவர். எனவே இதை முன்வைத்து, ராம்நாத் கோவிந்த்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரு வேட்பாளரை நியமிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக தனது வேட்பாளராக தலித் பிரிவை சேர்ந்தவரை நியமித்திருப்பதாலும், சோனியாவிடம், மோடியே நேரடியாக ஆதரவு கேட்டுள்ளதாலும், ஒருவேளை எதிர்க்கட்சிகள் குடியரசு தலைவர் வேட்பாளரை அறிவித்தால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தலித் விரோதிகள் என்ற முத்திரையை குத்த பாஜக தயாராகி வருவதாக தெரிகிறது. எனவே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும், தலித் பிரிவை சேர்ந்த ஒருவரையே குடியரசு தலைவர் வேட்பாளராக நியமிக்க வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications