தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால்... சட்ட நிபுணர்களுடன் ஜனாதிபதி தீவிர ஆலோசனை
டெல்லி: தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் அதை எப்படி கையாளுவது என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார்.
543 லோக்சபா தொகுதிகளுக்கான 16-வது லோக்சபா தேர்தல் 9 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணும் பணி வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து ஓரிரு நாளில் தேர்தல் முடிவுகள் குடியரசுத் தலைவரிடம் தேர்தல் ஆணையத்தால் ஒப்படைக்கப்படும்.
அப்போது, அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சியையோ அல்லது கூட்டணிக்கட்சியையோ ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் அழைப்பார். ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களை 272 தொகுதிகளையும் ஒரே கட்சியோ அல்லது ஏதேனும் கூட்டணியோ பெற்றுவிட்டால் அதிக சிரமிருக்காது. ஆனால், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போய் தொங்கு நாடாளுமன்றம் அமையக்கூடிய நிலை ஏற்பட்டால், அப்போது குடியரசுத்தலைவர் எடுக்கும் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகளின் படி பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொங்கு நாடாளுமன்றம் அமைந்து விட்டால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரபல வக்கீல்களான பாலி நாரிமன், சோலி செராப்ஜி, சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் மற்றும் அரசியலமைப்பு சட்ட நிபுணர்களை அழைத்து நேற்று பேசினார்.
அந்தக் கூட்டத்தில் தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் எந்த மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்வது என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் அவர் தீவிர ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்படும் நாளன்று நடத்தப்படும் செய்தியாளர்கள் சந்திப்புக்கான ஆயத்த வேலைகளும் துரித கதியில் நடந்து வருகிறது.