பிரணாப் முகர்ஜியின் பாதுகாப்பு வாகனம் 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து: 6 பேர் காயம்
டார்ஜிலிங்: டார்ஜிலிங் அருகே குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பாதுகாப்பு வாகனம் மலைச்சரிவில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது.இதில் உளவுத்துறை அதிகாரி ஒருவர் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டார்ஜிலிங்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது 4 நாள் சுற்றுப்பயணத்தை இன்று நிறைவு செய்தார். இதையடுத்து, டெல்லி செல்வதற்காக டார்ஜிலிங்கிலிருந்து பஹ்டோக்ராவுக்கு பிரணாப் முகர்ஜி தனது வாகனத்தில் இன்று பிற்பகல் சென்று கொண்டிருந்தார்.
அவரது வாகனத்தைத் தொடர்ந்து 6 பாதுகாப்பு வாகனங்கள் சென்றன. இந்நிலையில், பஹ்டோக்ராவுக்கு அருகே உள்ள மலைச்சாலையில் குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு வாகனங்களில் ஒன்று நிலைத்தடுமாறி 100 அடி பள்ளத்தில் விழுந்தது. இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் வாகனம் உள்பட அனைத்து பாதுகாப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டன. பின்னர் உடனடியாக ராணுவத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சுமார் 45 நிமிட தேடுதல் பணிக்குப் பின்னர், விபத்துக்குள்ளான வாகனத்தில் பயணம் செய்த உளவுத்துறை அதிகாரி மற்றும் 5 உள்ளூர் போலீஸார் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருந்தன.
இதையடுத்து, அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பாதுகாப்பாக இருக்கிறார். காயமடைந்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ததற்கு பின்னரே பிரணாப் முகர்ஜி அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டுள்ளார்'' என குடியரசுத் தலைவர் மாளிகையின் சுட்டுரைப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.