உத்தரகாண்ட்டில் ஜனாதிபதி ஆட்சி தொடரும்; 29-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு கூடாது: சுப்ரீம்கோர்ட்
டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி தொடரும் என்றும் வரும் 29-ந் தேதி ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
70 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் காங்கிரசுக்கு 36 எம்.எல்.ஏ.க்களும், பாஜகவுக்கு 28 எம்.எல்.ஏ.க்களும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு 6 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். முதல்வரா ஹரிஷ் ராவத் பதவி வகித்து வந்தார்.

அவருக்கு எதிராக காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் போர்க்கொடி உயர்த்தினர். இவர்கள் 9 பேரும் பாஜக எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து சட்டசபையில் கடந்த மாதம் அரசின் நிதி மசோதாவுக்கு எதிராக குரல் கொடுத்தனர். எனினும் நிதி மசோதா சட்டசபையில் நிறைவேறியதாக சபாநாயகர் கோவிந்த் சிங் தெரிவித்தார்.
அத்துடன் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 9 பேரையும் கட்சித் தாவல் தடை சட்டப்படி நீக்கம் செய்வதாகவும் அறிவித்தார். இதையடுத்து சட்டசபையில் மார்ச் 28-ந்தேதி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி மாநில ஆளுநர் கே.கே.பால் உத்தரவிட்டார்.
ஆனால் மார்ச் 27-ந்தேதி அம்மாநிலத்தில் திடீரென ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதை எதிர்த்து ஹரிஷ் ராவத் சார்பில் நைனிடால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜனாதிபதி ஆட்சிக்கு அதிரடி தடை விதித்தது; மேலும் வரும் 29-ந் தேதி ஹரீஷ் ராவத் அரசு பெரும்பான்மையை நிரூபிக்கலாம் என உத்தரவிட்டது.
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு செய்தது. அப்போது ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது, உத்தரகாண்ட் மாநிலத்தில் மறு உத்தரவு வரும் வரை ஜனாதிபதி ஆட்சி தொடரும் என்றும் வரும் 29-ந் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தபட்டது தொடர்பாக 7 கேள்விகளுக்கு அட்டர்னி ஜெனரல் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications