மீண்டும் நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டம்- ஜனாதிபதி ஒப்புதல்!!
டெல்லி: நிலம் கையகப்படுத்துதலுக்கான அவசர சட்டத்தை மீண்டும் செயல்படுத்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
2013-ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, நிலங்களை கையகப்படுத்த 80% விவசாயிகள் ஒப்புதல் அளிக்க வேண்டும் மேலும் 5 ஆண்டுகள் நிலத்தை பயன்படுத்தாவிட்டால் விவசாயிகளிடம் திருப்பி அளிக்க வேண்டும் என்ற திருத்தங்களை கொண்டுவந்தது.
ஆனால் தற்போதைய பா.ஜ.க. அரசு இந்த திருத்தங்களையும் நீக்கி அவரச் சட்டம் கொண்டுவந்துள்ளது. இதன்படி விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலத்தைக் கையகப்படுத்தலாம்;5 ஆண்டுக்கு பின்னரும் அரசு வசமே நிலம் இருக்கும் என்பது உள்ளிட்ட திருத்தங்களை அவசர சட்டத்தில் இடம்பெறச் செய்தது மத்திய அரசு.
இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக தாக்கல் செய்யப்பட்ட நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு லோக்சபா ஒப்புதல் அளித்தது. ஆனால் ராஜ்யசபாவில் ஆளும் பாரதிய ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால் அங்கு நிறைவேற்றப்படவில்லை.
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அக்கட்சிகளை சமாளிக்கும் பொறுப்பை மூத்த அமைச்சர்களிடம் பாரதிய ஜனதா ஒப்படைத்துள்ளது.
எப்படியும் ராஜ்யசபாவில் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றி விடுவது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதனிடையே பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி முடிவடைந்தது. இத் தொடரின் இரண்டாவது பாதி ஏப்ரல் 20-ந்தேதிதான் தொடங்குகிறது.
இந்நிலையில் நாளை மறுநாளுடன் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அவசர சட்டம் காலாவதி ஆகிறது. இதனால் அவசர சட்டத்தை மீண்டும் பிறப்பிப்பது என அண்மையில் மத்திய அமைச்சரவை முடிவெடுத்திருந்தது.
தற்போது இந்த மீண்டும் அவசர சட்டத்தை செயல்படுத்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.