மோடி தேசியக் கொடியில் கையெழுத்திடவில்லை; அது வெள்ளைத் துணிதான் - மத்திய அரசு விளக்கம்
டெல்லி: அமெரிக்காவில் மோடி தேசியக் கொடியில் கையெழுத்திட்டதாக எழுந்த சர்ச்சையில் அவர் தேசியக் கொடியில் கையெழுத்திடவில்லை என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது விளக்கமளித்துள்ளது.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி நேற்று முன்தினம் நியூயார்க் நகரின் வால்டோர்ப் ஆஸ்டோரியா ஓட்டலில் இந்தியாவின் சார்பில் நடத்தப்பட்ட அமெரிக்க தொழில் அதிபர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அமெரிக்காவின் பிரபல தொழில் அதிபர்கள் 50 பேர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விருந்தை சிறப்பாக அமைத்துக் கொடுத்ததாக தலைமை சமையற்கலைஞர் விகாஸ் கன்னாவை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டினார்.
அப்போது விகாஸ்கன்னா, இந்திய தேசியக்கொடியில் மோடியின் கையெழுத்தை பெற்றதாக கூறப்படுகிறது. அதை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு, தான் வெகுமதியாக கொடுக்க போவதாகவும் அவர் தெரிவித்தார். மோடி கையெழுத்திட்ட கொடியை விகாஸ்கன்னா ஊடகங்களுக்கும் காண்பித்தார்.
இது பெரும் சர்ச்சையை எழுப்பியது. இதைத் தொடர்ந்து இதில் தேசிய கொடி விதிமுறை மீறல் எதுவும் உள்ளதா? என்பதை ஆய்வு செய்வதற்காக அந்த கொடியை இந்திய அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் தகவல் வெளியானது. தேசியக்கொடியின் மீது பிரதமர் கையெழுத்திட்டது, இந்திய தண்டனை சட்டத்தை மீறுவதாக அமைந்துள்ளதா? என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜ்வாலாவிடம் நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அவர், "இதுபோன்ற விஷயங்களை பா.ஜ.க போல் நாங்கள் பெரிதுபடுத்த மாட்டோம். நாங்கள் பிரதமர் அலுவலகத்தை எப்போதும் மதிக்கிறோம். தேசியக்கொடிக்கு மரியாதை அளிப்பது 125 கோடி மக்களுக்கு செய்யும் மரியாதை ஆகும். உங்களைவிட தேசியக்கொடி மிகவும் உயர்வானது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.எங்களைப் பொறுத்தவரை பிரதமர் போன்ற பதவியில் இருப்பவர்கள் தேசியக்கொடிக்கு உரிய மரியாதை அளிக்கவேண்டும் என்பதையே எதிர்பார்க்கிறோம்" என்றார்.
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மணிஷ் திவாரி டுவிட்டரில், ‘‘தேசியக்கொடி விதிமுறைகளின்படி அதை தவறாக பயன்படுத்தினால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. இதை பிரதமர் படித்து இருக்கிறாரா'' என்று கேள்வி எழுப்பினார். இதனிடையே தேசியக் கொடியின் மீது பிரதமர் மோடி கையெழுத்து போட்டதாக கூறப்படும் தகவலை மத்திய அரசு மறுத்து உள்ளது.
இதுகுறித்த மத்திய அரசின் விளக்கத்தில், "மோடி கையெழுத்திட்ட தேசியக் கொடி பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது. தலைமை சமையற் கலைஞரின் மாற்றுத்திறனாளி மகள் கால் விரல்கள் மூலம் அழகிய வேலைப்பாட்டுடன் வடிவமைத்து இருந்த ஒரு துண்டு துணியில்தான் பிரதமர் கையெழுத்திட்டார். அந்த துணியில் தேசியக் கொடியின் நிறமோ, அசோக சக்கரமோ கிடையாது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.