2022ல் ஏழ்மை, ஊழல், குப்பைகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்- பிரதமர் மோடி உறுதி!
வரும் 2022ம் ஆண்டில் ஏழ்மை, குப்பைகள், ஊழல், தீவிரவாதம் இல்லாத இந்தியாவை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
டெல்லி: 2022ஆம் ஆண்டில், ஏழ்மை, குப்பைகள், ஊழல், தீவிரவாதம், ஜாதி, இன மத பாகுபாடு, கலவரங்கள் எதுவும் இல்லாத புதிய இந்தியாவை ஏற்படுத்த வேண்டும் என்று, பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்திய விடுதலை போராட்டம் நடந்த போது, வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டது. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் 75வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
வெள்ளையனே வெளியேறு போன்ற நாட்டின் சுதந்திர போராட்டங்களை பற்றி இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். வெள்ளையனே வெளியேறு போராட்டம் நாட்டிற்கு ஒரு தலைவரை உருவாக்கியது.
சுதந்திர போராட்டம் மட்டுமல்லாமல், இன வேறுபாட்டை களைவதாகவும், வெள்ளையனே வெளியேறு போராட்டம் அமைந்தது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்டம் இந்தியாவில் துவங்கியது. இங்கேயே துவங்கிய இந்த போராட்டம் இங்கேயே முடிந்தது என்றார். சுதந்திர போராட்டத்தில் பெண்கள் மிக முக்கிய பங்காற்றியுள்ளனர் என்றார்.
செய் அல்லது செத்து மடி என்ற முழக்கத்தை காந்திஜி முன்வைக்க, அதுவே, இந்திய சுதந்திர போராட்டத்தின் தாரக மந்திரமாக மாறியது" என்றார்.
மேலும், " வெள்ளையனே வெளியேறு போராட்டம் வெடித்தபோதுதான், காந்திஜி, ஒட்டுமொத்த இந்திய மக்களின் தலைவராக மாறினார். இதுபோன்ற வரலாற்று நிகழ்வுகளை, இளைய சமுதாயம் படித்து தெரிந்துகொள்வது அவசியம்" என்று கூறினார்.
இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றியும், அதில் நடைபெற்ற சில முககிய நிகழ்வுகள், தியாகிகள் வரலாறு பற்றியும் நினைவு கூர்ந்தார் பிரதமர் மோடி.
அப்போது நாம் கனவு காண்கிற ஒரு புதிய இந்தியாவை 2022 ல் உருவாக்கிட வேண்டும் என்றும், அதற்காக எல்லோரும் ஒருமித்து, பாடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
வறுமை, கல்வி, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை நம் கண்முன் உள்ள பெரிய சவால்கள் என்றார். சவால்கள் குறித்து நேர்மறை மாற்றத்தை கொண்டு வர வேண்டும். ஒரே இலக்கை வைத்து போராடினால் நாம் நினைத்ததை பெறலாம் என்றார்.
2022 ம் ஆண்டில் ஏழ்மை, மாசுபாடுகள், ஊழல், பயங்கரவாதம், சாதியம், மதவாதம் ஆகியவை இல்லாத இந்தியாவை உருவாக்குவதே நமது கனவு என உறுதி ஏற்போம்.நமது சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்கள் பெருமை கொள்ளும் வகையில், தோளோடு தோள் நின்று, ஒன்றாக உழைத்து புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்றார். அனைத்து கட்சிகள், மாநிலங்கள், வர்த்தகர்களின் பங்களிப்பே ஜிஎஸ்டி வெற்றி பெற காரணம் என்றார்.