சசிகலாவுக்கு தனிச் சலுகை.. ரூபாவிடம் போட்டுக் கொடுத்த கைதிக்கு தர்மஅடி.. போலீசில் மனைவி புகார்!
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு சலுகை வழங்கப்படுவதாக போட்டுக் கொடுத்த கைதி கடுமையாக தாக்கப்பட்டுள்ளார் என்று கைதியின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது என்ற தகவலை டிஐஜி ரூபாவிடம் தெரிவித்த கைதியை சிறை கண்காணிப்பாளர் கொடூரமாக தாக்கினார் என கைதியின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதிமுக அம்மா கட்சி பொதுச் செயலாளர் சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து வருகிறார். அவருடன், அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளனர்.
இந்நிலையில், சசிகலாவிற்கு சகல வசதிகளும் சிறையில் செய்து கொடுக்க 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக டிஐஜி ரூபா புகார் தெரிவித்தார். மேலும், சசிகலாவிற்கு என தனி அலுவலகமே செயல்பட்டு வந்ததாகவும், தனி சமையல் அறை ஏற்படுத்தி கொடுத்தாகவும் ரூபா குற்றம்சாட்டியிருந்தார்.
சசிகலவிற்கு சொகுசு வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பான தகவலை டிஐஜி ரூபாவிற்கு அளித்தது சிறைக் கைதி ராமமூர்த்தி. சசிகலாவிற்கு தனிச் சலுகைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்ட விவகாரம் பூதாகரமான நிலையில், இந்த தகவலை கொடுத்த கைதி ராமமூர்த்திக்கு தர்ம அடி விழுந்துள்ளது.
டிஐஜி ரூபாவிடம் எப்படி சசிகலா பற்றிய தகவலை சொல்லலாம் என்று கூறி சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் அவரை கடுமையாக தாக்கி துன்புறுத்தியுள்ளார். இந்தத் தகவலை அறிந்த ராமமூர்த்தியின் மனைவி போலீசில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
கைதி ராமமூர்த்தியின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளது இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பு சலுகை விவகாரத்தில் சசிகலாவிற்கு உதவியதாக 20 கைதிகள் பெல்லாரி சிறைக்கு சிறைத் துறையினர் இன்று மாற்றியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.