பிரியங்காவுக்கும், கணவர் ராபர்ட்டுக்கும் ஸ்பெஷல் பாதுகாப்பு சலுகை தொடரும்!
டெல்லி: பிரியங்கா காந்தியும், அவரது கணவர் ராபர்ட் வதேராவும் இணைந்து செல்லும்போது விமான நிலைய பாதுகாப்பு சோதனைகளிலிருந்து அளிக்கப்பட்டு வரும் விதி விலக்கை தளர்த்தும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பாதுகாப்பு விதிவிலக்கு சலுகை தொடரும் என்றும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது இந்த பாதுகாப்பு சலுகை அளிக்கப்பட்டது. அதன் படி விமான நிலையங்களில் இவர்கள் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள். ஆனால் இது மோடி பிரதமரானதும் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், காந்தி குடும்பத்தினருக்குத் தொடர்ந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. இந்த நிலையில் அவரது குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு சலுகைகள் நீக்கப்பட மாட்டாது. அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.இதுபோன்ற சலுகைகளை ஒரே உத்தரவின் மூலம் நீக்க முடியாது என்று தெரிவித்தார்.
தற்போது பிரியங்காவுக்கு எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அவரது கணவருக்கும் பாதுகாப்பு வளையம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில், ராபர்ட் வதேரா தனியாக விமான பயணம் மேற்கொண்டால் விமான நிலையங்களில் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார் என்ற முடிவை மத்திய அரசு எடுத்தது.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்ததால் சோனியாவுக்கு மட்டுமின்றி அவரது மருமகன் ராபர்ட் வதேராவும் இந்த சலுகையை கடந்த 10 ஆண்டுகளாக அனுபவித்து வந்தார். ஆனால் ராபர்ட் வதேராவை சோதனைக்கு உட்படுத்தும் முடிவால் பிரியங்கா அதிருப்தி அடைந்தார்.
இதையடுத்து, அவர் சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்.பி.ஜி) தலைவர் துர்கா பிரசாத்துக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர், விமான நிலைய சோதனைகளில் இருந்து என் கணவருக்கு விலக்கு அளிக்கப்படும் சலுகை திரும்ப பெறப்படுவதாக அறிந்தேன். அவருக்கு மட்டுமல்ல எனக்கும், என் குழந்தைகளுக்கும் கூட அந்த சலுகையை ரத்து செய்து விடுங்கள்.
நாங்கள் ஒரு போதும் சிறப்பு சலுகையை கேட்டதே இல்லை. மற்ற பயணிகள் போல சாதாரணமாக செல்லவே நாங்கள் விரும்புகிறோம். எனக்கும், என் குடும்பத்தினருக்கும் விமான நிலைய சோதனைகளில் விலக்கு அளித்து இருக்கும் விஷயம், அரசியல் ஆக்கப்படுவதை நான் விரும்பவில்லை. பொதுவாகவே என் கணவர் இந்த சலுகைகளை விரும்பியதே இல்லை.
அடிக்கடி அவர் தனக்கு இந்த சலுகை வேண்டாம் என்றே கூறி வந்தார். ஒவ்வொரு தடவையும் அவர் சோதனை நடத்தப்பட்டு மற்ற பயணிகளுடன் செல்லவே விரும்பினார். எனவே, என் கணவருக்கு மட்டுமின்றி எனக்கும் இந்த விலக்கை உடனடியாக திரும்பப் பெற்றால் நன்றாக இருக்கும் என்று கடிதத்தில் அவர் தெரிவித்திருந்தார்.
பிரியங்காவின் கடிதம் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்தே பிரியங்கா மற்றும் கணவருக்கு அளிக்கப்பட்டு வரும் சலுகை விலக்கப்படாது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.