நபிகள் அவதூறு: பதற்றம் தணியாத மே.வ. ஹவுராவில் 144 தடை உத்தரவு- பாஜக தலைவர் சுவேந்து அதிகாரிக்கு தடை!
கொல்கத்தா: நபிகள் நாயகம் குறித்த அவதூறு விவகாரத்தில் வன்முறைகள் நிகழ்ந்த மேற்கு வங்கத்தின் ஹவுராவில் பதற்றம் குறையவில்லை. ஹவுராவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பாஜக மூத்த தலைவரும் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதால் பாஜகவில் இருந்து நுபுர் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மற்றொரு தலைவர் நவீன் ஜிண்டால் அக்கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். ஆனாலும் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் விவகாரம் ஓயவில்லை.
நுபுர் சர்மா, நவீன் ஜிண்டாலை கைது செய்யக் கோரி நாடு முழுவதும் வெள்ளிக்கிழமையன்று இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் பல மாநிலங்களில் வன்முறைகள் வெடித்தன. டெல்லி, உ.பி. மே.வங்கம், கர்நாடகா, ஜார்க்கண்ட் என மொத்தம் 9 மாநிலங்களில் மிகப் பெரும் வன்முறை வெடித்தது.
நுபுர் சர்மா முதல் ஹவுரா கலவரம் வரை.. பாஜக செய்த பாவங்களால் மக்கள் அவதி! கொந்தளித்த மம்தா பானர்ஜி..!
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா பகுதியிலும் பயங்கர வன்முறை, தீ வைப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. ஹவுராவில் பாஜக அலுவலகம் ஒன்று தீ வைத்தும் எரிக்கப்பட்டது. இந்த வன்முறைகளைக் கண்டித்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, வன்முறைகளுக்குப் பின்னால் சில அரசியல் கட்சிகள் உள்ளன. அவர்கள் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறார்கள். இதனை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக செய்யும் பாவங்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என எச்சரித்தார். அத்துடன் ஹவுராவில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டதுய்.
இந்நிலையில் நேற்று ஹவுரா பகுதிக்கு செல்ல முயன்றதாக மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜூம்தார் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஹவுராவுக்கு மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி செல்ல முயன்றார். ஆனால் ஹவுராவில் 144 தடை உத்தரவு
அமலில் இருப்பதை சுட்டிக்காட்டி அவருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் ஹவுராவில் தொடர் பதற்றம் நிலவுகிறது. அங்கு அசம்பாவிதங்கள் தொடராமல் இருக்க பெரும் எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.