வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி-சி 28 ரக்கெட்..விஞ்ஞானிகள் மகிழ்ச்சி..
சென்னை : பிரிட்டனின் 5 செயற்கைகோள்களை சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி-சி 28 ரக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது.
புறப்பட்ட 19 வது நிமிடத்தில் திட்டமிட்டபடி அதன் சுற்று வட்டபாதையிலும் நிலை நிறுத்தப்பட்டதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வணிக ரீதியில் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு வர்த்தக பிரிவான "ஆன்டிரிக்ஸ்" நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்படி பிரிட்டனைச் சேர்ந்த "டிஎம்சி.3-1", "டிஎம்சி.3-2", "டிஎம்சி.3-3" என மொத்தம் 5 செயற்கைகோள்களை சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி. சி-28 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து (வெள்ளிக்கிழமை) இரவு 9.58 மணிக்கு விண்ணுக்கு வெற்றிகரமாக பாய்ந்து சென்றது. முன்னதாக இதன் கவுன்ட்டவுன் கடந்த 8-ம் தேதி துவங்கியது.
இந்த செயற்கைகோள்கள் பூமியில் இருந்து 120 டிகிரியில் தனித்தனியாக சுழன்று வந்து பூமியில் உள்ள மண் வளம் மற்றும் இயற்கை வளங்களை ஆய்வு செய்ய உள்ளது. இந்த செயற்கைகோள்களால் பூமியில் உள்ள எந்த பகுதியையும் எப்போது வேண்டுமானாலும் படம் முடிக்க முடியும்.
முன் எப்போதும் இல்லாத அளவில் 1440 கிலோ எடை கொண்ட வெளிநாட்டு செயற்கைகோள்களை இஸ்ரோ அனுப்புவது இதுதான் முதல்முறையாகும்.