விளையாட்டு விபரீதமானது.. ஓடும் ரயிலில் சாகசம்.. அடித்து தூக்கிய மின்கம்பம்.. தீயாக பரவும் வீடியோ
லூதியானா: ஓடும் ரயிலில் வெளியே தொங்கியபடி சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் மின் கம்பம் மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ கடந்த மூன்று நாட்களாக இணையத்தில் வைரலாகி வந்தது. தற்போதுதான் அந்த இளைஞரின் அடையாளத்தை போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
மற்றவர்களை கவர வேண்டும் என்பதற்காக ரயிலிலும், பேருந்திலும் சாகசம் செய்யும் இளைஞர்களுக்கு இந்த சம்பவம் ஒரு நல்ல பாடமாக இருக்கும் என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

'கெத்து' வலையில் சிக்கிய இளம் தலைமுறை
இன்றைய 2k கிட்ஸ் தலைமுறையை 'கெத்து' என்ற வார்த்தையும், 'மாஸ்' என்ற வார்த்தையும் ஆட்டிப் படைத்து வருகிறது. ஆசிரியரை எதிர்த்து பேசினால் கெத்து என்றும், சாலையில் பைக்கை வைத்து குரங்கு சேட்டையில் ஈடுபடுவதை மாஸ் என்றும் அவர்கள் தங்களுக்கு தாங்களே நினைத்துக் கொள்கின்றனர். இன்னும் ஒருசில இளைஞர்கள் இந்த நினைப்பில் ரயிலிலும், பஸ்ஸிலும் சாகசம் செய்கிறேன் என்ற பெயரில் மாணவர்கள் பல்லியை போல தொற்றிக்கொண்டு செல்வதையும் நாம் பார்த்திருப்போம். இதில் பல நேரங்களில் அவர்கள் கீழே விழுந்து விபத்தில் சிக்குவதும், சில சமயங்களில் உயிரிழப்பதும் கூட வாடிக்கையாக இருக்கிறது.

ஓடும் ரயிலில் சாகசம்
இந்நிலையில், பஞ்சாபில் இதுபோன்ற சாகசத்தில் ஈடுபட்ட ஒரு இளைஞர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். அதுகுறித்து இங்கு பார்க்கலாம். பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் உள்ள கான்னா பகுதியில் கடந்த 6-ம் தேதி மால்வா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது அதில் பயணித்த ஒரு இளைஞர், ரயிலின் வாசலில் இருந்த கம்பியை பிடித்து தொங்கிக் கொண்டிருந்தார். மேலும், எதிரில் மின் கம்பங்கள் வரும் போது தலையை விட்டு விட்டு எடுத்து அவர் விளையாடிக் கொண்டிருந்தார்.

அடித்து தூக்கி வீசிய மின்கம்பம்
இவரது இந்த சாகசத்தை ரயிலில் இருந்த மற்றொரு பயணி, தனது செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். மற்ற பயணிகளும் அவரது இந்த விபரீத விளையாட்டை பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். பல நிமிடங்கள் அவர் இவ்வாறு செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு மின்கம்பத்தின் மீது பயங்கர வேகத்தில் அவர் மோத, அடுத்த நொடியே அவர் தூக்கி வீசப்பட்டார். இவை அனைத்தும் வீடியோவில் பதிவாகி இருந்தது. ஆனால் அதன் பிறகு அவர் என்ன ஆனார் என தெரியவில்லை.

அடையாளம் தெரிந்தது
இந்நிலையில், அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அன்றைய தினம் மதியம் இந்த விபத்து நேரிட்டடதாகவும், அவரது உடலை போலீஸார், மாலையில் கைப்பற்றியதாகவும் ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாகின. மேலும், போலீஸார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் கிஷோர் சிங் (26) என்பது தெரியவந்துள்ளது. அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறித்த விவரம் தெரியவரவில்லை.












Click it and Unblock the Notifications