பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை கோலாகலம்..லட்சக்கணக்கான பக்தர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு
ஒடிசா மாநிலம் பூரியில் ரத யாத்திரை கோலாகலமாக தொடங்கியுள்ளது. பக்தர்களின் வெள்ளத்தில் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களில் ஜெகந்நாதர், தேவி சுபத்ரா, பாலபத்ரா வலம் வருகின்றனர்.
ஒடிசா: ஒடிசா மாநிலம் பூரியில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை கோலாகலமாக தொடங்கியுள்ளது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி தரப்பட்டதால் ரத யாத்திரையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். பக்தர்களின் வெள்ளத்தில் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களில் ஜெகந்நாதர், தேவி சுபத்ரா, பாலபத்ரா வலம் வருகின்றனர்.
உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை இன்று தொடங்கி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் பங்கேற்பின்றி ரத யாத்திரை நடைபெற்றது. இந்த ஆண்டு கடந்த 1 மாத காலமாகவே ரத யாத்திரைக்கான ஏற்பாடுகள் நடைபெற்ற வந்தன.

பூரி ஜெகந்நாதர்
பூரி ஒடிசா மாநிலத்தில் உள்ள அழகிய கடற்கரை நகரம். இங்குள்ள ஜெகந்நாதர் கோவில் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆண்டு தோறும் இங்கு நடைபெறும் ரத யாத்திரையை காண கண் கோடி வேண்டும் என்பார்கள். இந்த ஆலயத்தில் மூலவர்களாக பாலபத்ரா, அவரின் சகோதரர் ஜெகந்நாதர், சகோதரி தேவி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமும் உடன் உள்ளது.

பிரம்மாண்ட ரதங்கள்
ஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று மூலவர்களுக்குப் புதிய தேர் செய்யப்பட்டு, அதில் அவர்கள் இந்த தேரில் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். ஜகன்னாதருக்கு 45 அடி உயர நந்திகோஷம், பாலபத்ராவுக்கு 44 அடி உயர தலத்வாஜா, சுபத்ராவுக்கு 43 அடி உயர தேபாதலனா ஆகிய மூன்று பிரம்மாண்டமான தேர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 16 சக்கரங்களைக் கொண்ட தேரில் ஜெகந்நாதரும், 14 சக்கரங்களைக் கொண்ட தேரில் பாலபத்திரரும், 12 சக்கரங்களுடன் அமைந்துள்ள தேரில் சுபத்ராவும் எழுந்தருள வண்ணமயமான ரத ராத்திரை நடைபெறுகிறது.

10 நாட்கள் திருவிழா
ஒடிசாவின் பூரி நகரில் மிக நீண்ட தெருக்களில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களையும் இழுக்கும் வைபவம் படாதண்டா என்று அழைக்கப்படுகிறது. 10 நாட்கள் இந்தத் திருவிழா நடக்கும். தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்படும் ஜெகந்நாதர், பாலபத்திரர், தேவி சுபத்ரா ஆகியோர் 2 கி.மீ. தொலைவில் உள்ள தங்களின் அத்தை கோயிலான மவுசிமா கோயிலுக்குச் சென்று ஓய்வு எடுப்பார்கள்.

லட்சுமி தேவி
மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குண்டிச்சா கோயிலை சென்றடைந்ததும் ஜெகந்நாதர் ஓய்வெடுப்பார். திருவிழாவின் 4 நாளில் தனது கணவரை காண லட்சுமி தேவி குண்டிச்சா கோயிலுக்கு வருகை தருவார். அதைத் தொடர்ந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு பின்னர் ஜெகந்நாதர் கோயிலை வந்தடைந்ததும் விழா நிறைவடைய உள்ளது.

வரம் தரும் ஜெகந்நாதர்
இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி இன்று முதல் 9ம் தேதி வரை திருவிழா நடைபெறும். அதன் தொடக்கமாக ஜூலை 1 ஆம் தேதி இன்று தேர் திருவிழா ஆரம்பமாகிறது. இந்த தேர் திருவிழா நாளில் ஒவ்வொரு ஆண்டும் உடன்பிறப்புகள், ஜெகந்நாதர், தேவி சுபத்ரா மற்றும் பலபத்ரா ஆகியோர் தனித்தனியாக மூன்று ரதங்களில், பூரி நகரத்தை சுற்றி யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு வேண்டிய வரம் அள்ளி தருவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மணல் சிற்ப ரதங்கள்
ஜெகந்நாதரின் ரத யாத்திரையை முன்னிட்டு, பிரபல மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் 125 மணல் ரதங்களையும், ஜெகந்நாதரின் மணல் சிற்பத்தையும் உருவாக்கியுள்ளார். ஏற்கனவே, 100 மணல் தேர்களை உருவாக்கி சாதனை படைத்த பட்நாயக், தற்போது பூரி கடற்கரையில் 125 மணல் தேர்களை செதுக்கி லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டுக்காக மற்றொரு சாதனையை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பட்நாயக் தனது மணல் கலை நிறுவன மாணவர்களுடன் சேர்ந்து இந்த சிற்பங்களை முடிக்க சுமார் 14 மணிநேரம் தேவைப்படுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மோடி வாழ்த்து
ஜெகந்நாதர் ரத யாத்திரை திருவிழாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் ரத யாத்திரையின் சிறப்பு நாளுக்கு வாழ்த்துக்கள். ஜெகந்நாதரின் நிலையான ஆசீர்வாதத்திற்காக இறைவனை பிரார்த்திக்கிறோம். நாம் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க ஜெகந்நாதர் ஆசீர்வதிப்பார் என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications