ரயில்வே தேர்வில் 'அம்மா' பற்றிய கேள்வி: ராஜ்யசபாவில் அதிமுகவினர் அமளி
டெல்லி: ரயில்வே துறை தேர்வில் ஜெயலலிதா பற்றிய கேள்வி இருந்ததற்கு ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்து கோஷமிட்டனர்.
ரயில்வே துறையில் ஜூனியர் என்ஜினியர் பதவிக்கான தேர்வு ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்றது. 21 மண்டலத்தில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் சென்னை மண்டலத்தில் நடந்த தேர்வில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி அதிமுகவினரை கோபம் அடையச் செய்துள்ளது.

அந்த கேள்வி இது தான்,
இந்தியாவில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று முதல்வர் பதவியை முதலில் இழந்தவர் யார்?
அ. லாலு பிரசாத் யாதவ், ஆ. ஜெகன்னாத் மிஸ்ரா, இ. ஜெ. ஜெயலலிதா, ஈ. எதியூரப்பா.
ரயில்வே தேர்வில் ஜெயலலிதா பற்றி கேள்வி கேட்கப்பட்டதற்கு இன்று ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து அவையில் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் கூறுகையில்,
ரயில்வே துறை தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் சர்ச்சைக்குரிய விதத்தில் இடம்பெற்றுள்ளது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அந்த கேள்வியை உடனடியாக நீக்க வேண்டும் என்றார்.
இந்த விவகாரம் பற்றி பேச அனுமதி அளிக்குமாறு அதிமுகவினர் கேட்க அவர்களின் கோரிக்கையை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டார். இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications