ஓய்வு பெறும் ரகுராம் ராஜன்.. ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை அடுத்து அலங்கரிக்கப் போவது யார்?
டெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் தேதியோடு ஓய்வு பெற இருக்கிறார். ஓய்வு பெற்ற பிறகு, கல்விப் பாதையில் செல்ல உள்ளதாக நேற்று ரிசர்வ் வங்கி பணியாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ரகுராம் ராஜனுக்குப் பின்னர் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் யார் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஆளுநர் பட்டியலில் இருக்கும் ஏழு பேரின் பெயர்களைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாவது முறையாக ரகுராம் ராஜனை நியமிக்கக்கூடாது. அவருக்கு அந்த தகுதி இல்லை என்று சில மாதங்களுக்கு முன்பே கொளுத்தி போட்டவர் பாஜகவின் ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணிய சாமி. இது விவாதப் பொருளான நிலையில், ரகுராம் ராஜன் தன் பணியாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், செப்டம்பர் 4, 2016 அன்று என் பணி நிறைவடைந்ததும் நான் மீண்டும் கல்விப் பாதைக்கே செல்ல இருக்கிறேன். நான் எப்போதும் இந்த தேசத்துக்காக பணியாற்றத் தயாராகவே இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
ரகுராம் ராஜன் கடிதம்
நான் இன்னும் அடுத்த இரு மாதங்களுக்கு உங்களோடுதான் பணியாற்ற இருக்கிறேன். உங்களது அர்ப்பணித்தப் பணிக்காகவும், கண்மூடித்தனமான ஆதரவு காரணமாகவும் ஆர்பிஐ குடும்பத்தில் இருக்கும் உங்கள் எல்லோருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடனான பயணம் அற்புதமான ஒன்றாக இருந்தது. எனக்கு பின் வருபவர்கள் உங்கள் உதவியால் நம்மை புதிய உயரத்துக்கு இட்டு செல்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் ரகுராம் ராஜன்.
சுப்ரமணிய சாமி கருத்து
ரகுராம் ராஜன் என்பவர் இந்திய அரசின் ஒரு ஊழியர். நாம் ஒரு பணியாளரை மக்களின் வாக்கு அடிப்படையில் தேர்ந்தெடுப்பதில்லை என்று சுப்ரமணிய சாமி கருத்து தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம் கருத்து
ரகுராம் ராஜனின் இந்தச் செயலானது எனக்கு ஏமாற்றத்தையும் ஆழ்ந்த சோகத்தையும் அளிக்கிறது. ஆனால், இதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. இந்த அரசுக்கு ரகுராம் ராஜனை வைத்திருப்பதற்கான தகுதியில்லை. ஆனாலும், இந்தியாவுக்கு இது ஒரு இழப்பு என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
அமர்த்தியா சென்
உலகின் மிகத் திறமையான நிதிப் பொருளாதாரச் சிந்தனையாளரை நாம் இழந்துள்ளோம். இது, இந்த தேசத்துக்கே சோகம் அளிக்கக்கூடியதாகும் என்று பிரபல பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் குறிப்பிட்டுள்ளார்.
விஷால் சிக்கா
அவர் ஒரு அசாதாரணமான ஆளுநர். அவரது வாழ்க்கையிலும், கல்வித்துறையிலும் சிறப்பான பங்களிப்பை அளிக்க வாழ்த்துகிறோம். அவரோடு இணைந்து பணியாற்ற ஏதேனும் ஒரு வகையில் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வேன் என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விஷால் சிக்கா கூறியுள்ளார்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் சேஷசாயி
இது ரகுராம் ராஜனின் முடிவு. அவர் கல்வியின்மீது எப்போதுமே தீவிர ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். சீக்கிரமே ரிசர்வ் வங்கிக்கு இன்னொரு ஆளுமை வந்து, ரகுராம் ராஜன் தொடங்கி வைத்த மிகப்பெரிய பணியைத் தொடருவார் என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் சேஷசாயி கூறியுள்ளார்.
அருண் ஜெட்லி
ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்து ரகுராம் ராஜன் ஆற்றிய பணிகளைப் பாராட்டுவதாகவும், அவரது முடிவை மதிப்பதாகவும் கூறினார். விரைவிலேயே புதிய ஆளுநர் யார் என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
அடுத்த ஆளுநர் யார்?
ரிசர்வ் வங்கியின் அடுத்த ஆளுநர் யார் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர், அடுத்த ஆளுநர் பட்டியலில் இருக்கும் ஏழு பேரின் பெயர்களைப் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். விஜய் கேல்கர், ராகேஷ் மோகன், அசோக் லாஹிரி, உர்ஜித் படேல், அருந்ததி பட்டாச்சார்யா, சுபிர் கோகம் மற்றும் அசோக் சாவ்லா ஆகியோரது பெயர்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.
அருந்ததி பட்டாச்சார்யா
உர்ஜித் படேல் தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக உள்ளார். அருந்ததி பட்டாச்சார்யா ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் தலைவராக உள்ளார். அருந்ததி பட்டாச்சார்யா ரிசர்வ் வங்கியின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையை பெறுவார்.