கர்நாடகாவை கொள்ளையடித்த பாஜக: ராகுல் தாக்கு
கர்நாடக மாநிலம் பெல்காமில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
ஏழைகளின் தோழனாக காங்கிரஸ் கட்சி விளங்கி வருகிறது. நாங்கள் தொடர்ந்தும் இதேபோல் பணியாற்றுவோம்.
நாட்டில் உள்ள பெண்களுக்கும், ஏழைகளுக்கும் அதிகாரம் தர காங்கிரஸ் முயற்சிக்கிறது. ஆனால் பாரதிய ஜனதா கட்சிதான் முட்டுக்கட்டையாக இருக்கிறது.
காங்கிரஸை ஊழல் கட்சி என்கிறது பாரதிய ஜனதா. ஆனால் பாரதிய ஜனதா ஆட்சி நடத்தும் குஜராத்திலும், மத்திய பிரதேசத்திலும் ஊழல் ஆட்சிதானே நடைபெறுகிறது.
மக்களுக்கு அதிகாரம் வழங்குவதில் கர்நாடக முதல்வர் எங்களுக்கு துணையாக பணியாற்றுகிறார்; ஏழைகளின் நண்பனாக கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருகிறது.
நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்காகவும், இளைஞர்களுக்காகவும் பணியாற்றுவோம்; பெண்களுக்கான மசோதாக்களை நிறைவேற்றுவோம்; பாரதிய ஜனதா கட்சி வெறும் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்துள்ளது. ஆனால் எங்களுக்கு செயல்களில் நம்பிக்கை இருக்கிறது.
வெற்று காசோலைகளை கொடுத்து கர்நாடகாவை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் கொள்ளை அடித்துள்ளனர். நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் தடுத்து வருகிறது பாரதிய ஜனதா கட்சி.
யாரும் பட்டினியாக இருக்கக் கூடாது என நாங்கள் விரும்புகிறோம்; கர்நாடகாவில் நடந்த குற்றங்களுக்காக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த முதல்வர் சிறைக்கு சென்றதை அவர்கள் மறந்து விட்டனர்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.