"பழங்குடியினரா? ஆதிவாசியா?".. குஜராத்தில் வெடியை கொளுத்திய ராகுல்காந்தி.. முதல் நாளே காட்டம்!
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருக்கையில் மாநிலத்தின் மற்றொரு பகுதியில் ராகுல்காந்தியும் பரப்புரை மேற்கொண்டிருக்கிறார்.
சூரத் நகரில் பேசிய ராகுல்காந்தி, நாட்டு மக்களின் ஒற்றுமைக்காக 'பாரத் ஜடோ யாத்திரை' நடைபெறுகிறது எனவும், பாஜக நாட்டு மக்களின் அடையாளங்களை அழித்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.
பழங்குடியின மக்களை ஆதிவாசிகள் என்று கூறுவதன் மூலம் பாஜகவின் நோக்கத்தை புரிந்துகொள்ள முடியும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

பொதுக்கூட்டம்
சூரத் நகரின் மஹுவாவில் உள்ள அன்வாலின் பஞ்ச் ககடாவில் இன்று காலை பிரமாண்ட பேரணி நடைபெற்றது. பேரணி முடிந்த இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய ராகுல்காந்தி இவ்வாறு குறியுள்ளார். கூட்டத்தில் அவர் பேசியதாவது, "நாட்டை ஒருங்கிணைக்க 'பாரத் ஜடோ யாத்திரை' நடத்தப்படுகிறது. இந்த யாத்திரைக்கு மக்கள் ஆசி வழங்கியுள்ளனர். விவசாயிகள், தலித்துகள், பழங்குடியினர் என அனைத்து தரப்பினரும் இந்த யாத்திரையில் பங்கேற்றும், ஆதரவளித்தும் வருகின்றனர். இது அன்பின் பயணம். மகாத்மா காந்தி இந்தியாவை ஒன்றிணைக்க பயணித்தார். அதைப்போன்றுதான் இந்த பயணமும்.

பழங்குடியினர்
சாதி மற்றும் மத ஆதிக்கத்தை எதிர்த்த அனைவரும் இந்த யாத்திரையில் பங்கேற்றுள்ளனர். வெறுப்புணர்வை ஒழிப்பதற்காக இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. பாஜக வெறுப்பையும், பிரிவினையையும் ஏற்படுத்துகிறது. மேலும், அவர்கள் நம்முடைய அடையாளங்களை அழித்து வருகின்றனர். நாம் நாட்டின் பூர்வ குடிகள், நாட்டின் முதல் உரிமையாளர்களான 'பழங்குடியின' மக்களை அவர்கள் 'ஆதிவாசிகள்' என்று அழைக்கிறார்கள். இதன் மூலம் அவர்களை பூர்வ குடிகளாக அங்கீகரிக்க மறுக்கிறார்கள். காடுகளை பற்றியும், சுற்றுசூழலை பற்றியும் பழங்குடியின மக்களை விட யாருக்கும் அதிகம் தெரியாது.

நிலைமை
பழங்குடியின சமூகத்துடனான எங்கள் குடும்பத்தின் நடப்பு மிக நீண்டது. சிறுவயதில் எனது பாட்டி 'இந்திரா காந்தி' எனக்கு புத்தகம் ஒன்றை பரிசளித்தார். அதில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த சிறுவன் ஒருவனின் படம் இருந்தது. இதைப்பற்றி என்பாட்டியிடம் கேட்கையில், இவர்கள்தான் இந்தியாவின் முதல் உரிமையாளர்கள் என்று கூறினார். ஆனால் நேற்று எனது யாத்திரையில் பழங்குடி சமூகத்தின் இளைஞர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவருடைய குரலில் பாட்டி கூறிய 'முதல் உரிமையாளர்' என்கிற சாயல் காணப்படவில்லை. மாறாக அவர், தனகு வேலையில்லை என்றும், அவர்கள் வசித்த பகுதியை கார்ப்ரேட் நிறுவனங்கள் பறித்து கொண்டுவிட்டது என்றும் கூறினார். இதுதான் நாட்டின் நிலைமை.

தேர்தல்
இதனை எதிர்த்துதான் நாம் போராட வேண்டி இருக்கிறது. இப்படியான போராட்டத்தை வலியுறுத்திதான் யாத்திரை நடக்கிறது. மக்களாகிய நீங்கள்தான் இதற்கு தீர்வு காண வேண்டும்" என்று கூறியுள்ளார். குஜராத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 1ம் தேதியும் 5ம் தேதியும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டத்தில் 89 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டத்தில் 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அதுபோல வரும் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளியாகின்றன.












Click it and Unblock the Notifications