மிஸ்டர் மோடி! 56 இஞ்ச் மார்பை விரித்து என்னை கைது செய்யுங்கள்- ராகுல் நேரடி சவால்!!
டெல்லி: இங்கிலாந்து நாட்டு குடியுரிமை வைத்திருப்பதாக தம் மீது கூறப்படும் புகார் குறித்து தமது 56 இஞ்ச் மார்பை உயர்த்தி விசாரணை நடத்த பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும்... சிறைக்குப் போகவும் தயார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சவால்விட்டுள்ளார்.
ராகுல் காந்தி, இங்கிலாந்து குடியுரிமை பெற்றிருப்பதாக பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமி அண்மையில் குற்றம்சாட்டி இருந்தார். இதனால் ராகுலின் இந்திய குடியுரிமையையும் அவரது எம்.பி. பதவியையும் பறிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சி இந்த புகாரை திட்டவட்டமாக மறுத்திருந்தது.

இந்நிலையில் டெல்லியில் இந்திரா காந்தியின் 98வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசியதாவது:
எங்கள் குடும்பத்தின் மீது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகின்றனர். இதை நான் சிறு வயது முதலே பார்த்து வருகிறேன். இதற்கெல்லாம் நான் அஞ்சப் போவதில்லை.
பிரதமர் மோடி அவர்களே! உங்களிடம்தான் அத்தனை விசாரணை அமைப்புகளும் இருக்கிறதே... என் மீது பல புகார்கள் கூறப்படுகின்றனவே... உங்கள் 56 இஞ்ச் மார்பை உயர்த்தி எனக்கு எதிரான விசாரணைக்கு உத்தரவிடுங்கள்..
6 மாத காலத்தில் என் மீது தவறு நிரூபிக்கப்பட்டால் சிறையில் தூக்கிப் போடுங்கள்.... அதைவிட்டுவிட்டு அவதூறு சேற்றை என் குடும்பத்தின் மீது வாரி இறைக்காதீர்...
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
போலீசே இழுத்துட்டு போகும்- சுவாமி
ராகுலின் இந்த பேச்சுக்கு சுப்பிரமணியன் சுவாமி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ராகுல் மீது தவறு நிரூபிக்கப்பட்டால் அவர் என்ன சிறைக்குப் போவது? அவரது அனுமதியில்லாமலேயே போலீசார் சிறைக்கு இழுத்துப் போய்விடுவார்கள்.. தன் மீது உரிய விசாரணை நடத்த ராகுல் விரும்பினால் இங்கிலாந்து அரசிடம் அவர் தாக்கல் செய்த ஆவணங்களை முதலில் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications