காங். நிர்வாகிகள், தொண்டர்களை வாரம் ஒருமுறை ராகுல் சந்திக்கும் 'ஜனதா தர்பார்'
கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை வாரம் ஒருமுறை சந்திக்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி திட்டமிட்டு உள்ளார்.
டெல்லி : காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள ராகுல்காந்தி இனி வாரம் ஒருமுறை கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டு உள்ளார் .
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி இன்று டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த ராகுல் காந்தி பல புதிய முயற்சிகளை எடுத்துவருகிறார். அதன் ஒரு பகுதியாக வாரம் ஒருமுறை டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், டெல்லியில் இல்லாத நாட்களில் தான் எங்கு இருந்தாலும், அங்குள்ள தொண்டர்களை சந்திக்கவும் ராகுல் திட்டமிட்டு உள்ளார். வாரந்தோறும் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் கட்சி நிர்வாகிகளையும், சனிக்கிழமைகளில் தொண்டர்களையும் சந்திக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்கு 'ஜனதா தர்பார்' என்று பெயரிடப்பட்டு உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதற்கான ஆயத்தப்பணிகளில் ராகுல்காந்தி தற்போது ஈடுபட்டு வருகிறார். இதற்காக நாகலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு தனிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளது.
மேலும், வருகிற 2019ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்கிற குறிக்கோளோடு ராகுல் காந்தி செயல்பட்டு வருகிறார். அதற்கான முன்னேற்பாடாகவே நாடு முழுவதும் கட்சித் தொண்டர்களை சந்திக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று அவர் தெரிவித்தார்.