சசிதரூருக்கு "ஷாக்" கொடுத்த ராகுல்.. ஒரே ஒரு போன்காலில் செய்தித் தொடர்பாளர் பதவி பறிப்பு!!
டெல்லி: பிரதமர் மோடிக்கு ஓவராக ஜால்ரா அடித்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் செய்தித் தொடர்பாளர் பதவியை பறிக்க உத்தரவிட்டது ராகுல் காந்திதான் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து தள்ளுவதில் ரொம்பவே ஆர்வம் காட்டியவர் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர். மோடி ஐநாவில் பேசினாலும் செங்கோட்டையில் பேசினாலும் அவரது ஜால்ரா சப்தம் காதைப் பிளக்க கடுப்பாகிப் போகினர் காங்கிரஸ் கட்சியினர்.
இதனால் சசிதரூர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரளா காங்கிரஸார் போர்க்கொடி தூக்கினர். இருப்பினும் முறைப்படி கட்சித் தலைமைக்கு இது தொடர்பாக எந்த ஒரு புகார் மனுவையும் கேரளா காங்கிரஸ் அனுப்பி வைக்காமலேயே இருந்தது.
சனிக்கிழமை நிலவரம்..
கடந்த சனிக்கிழமையன்று கூட செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் மோதிலால் வோரா, சசிதரூர் மீது இன்னும் எந்த புகாரும் எங்களுக்கு வரவில்லை.. வந்த பின்னர் நாங்கள் அதுகுறித்து பரிசீலிப்போம் என்றுதான் கூறியிருந்தார்.
ஷிண்டா பிஸி
அதேபோல் மற்றொரு ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் சுஷில்குமார் ஷிண்டே, மகாராஷ்டிரா தேர்தலில் பிசியாக இருந்தார். சனிக்கிழமை இரவு வரை இதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலையாக இருந்து வந்தது.
போன் போட்ட ராகுல்
விடிந்தது ஞாயிறு... மோதிலால் வோரா மற்றும் ஏ.கே. அந்தோணிக்கு வந்தது ஒரு போன் கால்.. பேசியது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி...
பரபர ஞாயிறு..
அவ்வளவுதான் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே கேரளா காங்கிரஸ் கமிட்டியிடம் இருந்து சசிதரூருக்கு எதிரான புகார் மனு டெல்லிக்கு பறந்தது. மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் இருந்த சுஷில்குமார் ஷிண்டேவுக்கும் தகவல் போனது.
சோனியா ஒப்புதல்
வழக்கமான நடைமுறைகள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு சசி தரூரின் செய்தித் தொடர்பாளர் பதவியை பறிப்பதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது. அன்று மாலையிலேயே சோனியாவின் ஒப்புதலும் பெறப்பட்டு திங்கள்கிழமை ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது.
ராகுல் ஆவேசம் ஏன்?
சசிதரூர் இதுநாள் வரை மோடியை புகழ்ந்து கொண்டிருந்த போது பொறுமை காத்த ராகுல் திடீரென கொந்தளிகக் காரணம், அவரது குடும்பத்தினர் மீது மோடி நேரடியாக தாக்கி தேர்தல் பிரசாரம் செய்ததுதானாம்.
கோபத்தை தணித்துக் கொண்ட ராகுல்
மகாராஷ்டிரா, ஹரியானாவில் தேர்தல் பிரசாரம் செய்த மோடி, காங்கிரஸிடமிருந்து இந்தியாவை மீட்போம் என்று கூறியதுடன் சோனியா குடும்ப அரசியலையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இதற்கு ராகுலும் பதிலடி கொடுத்த கையோடு மோடியை தொடர்ந்து ஆதரித்து பேசி வந்த சசிதரூருக்கும் ஆப்பு வைத்து கோபத்தை தணித்துக் கொண்டாராம்.
அடக்கி வாசித்த சசி தரூர்
இதனால் தான் என்னிடம் விளக்கம் கூட கேட்காமல் கட்சிப் பதவியை பறித்துவிட்டார்கள்.. இருந்தாலும் கட்சி முடிவு செய்துவிட்டது என்ற ரீதியில் அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறார் சசிதரூர்.