மோடிக்கு போட்டியாக வாரணாசியில் ராகுல்காந்தி பிரமாண்ட பேரணி
வாரணாசி: அமேதி தொகுதியில் நரேந்திரமோடி பிரச்சாரம் செய்ததற்கு பதிலடியாக காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி வாரணாசி தொகுதியில் பிரமாண்ட பேரணி நடத்தினார்.
உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்திபோட்டியிடும் அமேதி தொகுதியில் கடந்த வாரம் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கடந்த வாரம் தேர்தல் பிரச்சாரம் செய்தார். நேரு குடும்பத்தை கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு போட்டியாக மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் ராகுல்காந்தி இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
தொகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் கோல்கட்டா பகுதியில் ராகுல்காந்தி தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார். திறந்த ஜீப்பில் சென்ற ராகுல்காந்திக்கு சாலையின் இருபுறமும் நின்ற காங்கிரஸ் தொண்டர்கள் ரோஜாப்பூக்களை தூவி வரவேற்பு கொடுத்தனர்.
சில தினங்களுக்கு முன்பு மோடி பேரணி நடத்தும்போதும் இதேபோல பாஜக தொண்டர்கள் அவருக்கு மலர்தூவி வரவேற்பு அளித்தனர். அதையே ராகுலும் இன்று செய்தார். முன்னதாக சுதந்திர போராட்ட தியாகி மதன் மோகன் மால்வியா சிலைக்கு ராகுல்காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் கட்சியின் வாரணாசி தொகுதி வேட்பாளர் அஜய்ராய் உடனிருந்தார். ராகுல்காந்தியின் ஊர்வலம் 12 கிலோமீட்டர் தூரம் சென்றது. இதை நான்கு மணி நேரத்தில் ராகுல்காந்தி கடந்தார். வாரணாசியில் மோடி நடத்திய பேரணியின்போது 4 கிலோமீட்டர் தூர பேரணி பாதையை கடக்க 3 மணி நேரம் பிடித்தது,. இருப்பினும் கிலோமீட்டர் கணக்கில் மோடி மற்றும் கேஜ்ரிவாலைவிட அதிகமாக வாரணாசியில் ராகுல்காந்தி பேரணி நடத்தியுள்ளார்.
தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, பெண்கள் முன்னேற்றத்துக்கு காங்கிரஸ் செய்துள்ள சாதனைகளையும், இனிமேல் ஆட்சிக்கு வந்தால் மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகளையும் பட்டியலிட்டார்.ஏழைகளுக்காக காங்கிரஸ் பாடுபடும் எனவும், பாஜக பணக்காரர்களுக்கான அரசு எனவும் குற்றம்சாட்டினார். குஜராத் அரசை தாக்கிப்பேசவும் அவர் மறக்கவில்லை. அதானிக்கு குறைந்தவிலையில் குஜராத்தில் நிலம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தொழிலதிபர்களைவிட விவசாயிகளுக்கு குஜராத்தில் அதிக வட்டியில் கடன் அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மோடிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்த இடங்களிலும் பிரச்சாரம் செய்ய ராகுல்காந்திக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.