பா.ஜ.கவுக்கு எதிராக ராகுல் தொடுத்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்'... இது கர்நாடக பரபரப்பு
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கர்நாடகாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தொடுத்துள்ள 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு: விவசாயிகளின் கடனை ரத்து செய்து கர்நாடகாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தொடுத்துள்ள 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில், கடந்த ஜூன் 20ம் தேதி வரை, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.50,000 மதிப்புடைய கடன்களை ரத்து செய்வதாக, அம்மாநில முதல்வர் சித்தராமையா அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதனால், சிறு விவசாயிகள் பெரும் பயன்பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது. மத்திய அரசு விவசாயிகளின் வங்கிக் கடன்களை ரத்து செய்ய, தாமதம் காட்டி வருகிறது.

விவசாயிகள் வரவேற்பு
இந்நிலையில், கர்நாடகாவில் ஆட்சி நடத்தி வரும் காங்கிரஸ் அரசு இம்முயற்சியை மேற்கொண்டுள்ளது விவசாயிகள் மத்தியில் பெரிய அளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இது கர்நாடக காங்கிரசாருக்கும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.

ராகுலின் ஆலோசனைப்படி
இது, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் ஆலோசனைப்படி, அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 2018ம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, இந்த அறிவிப்பை, சித்தராமையா, ராகுல் காந்தி ஆகியோர் ஆலோசித்து நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

சர்ஜிக்கல் ஸ்டிரைக்
இந்த அறிவிப்பு, பா.ஜ.கவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட அரசியல் 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சமயோசிதமாக ராகுல் காந்தி செயல்பட்டுள்ளார் என்றும் கங்கிரஸ் கட்சியினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

பாஜகவால் முடியாதது
மத்தியிலும் ஆளும் பாஜக அரசு வங்கிக் கடனை ரத்து செய்யவில்லை. பாஜகவால் செய்ய முடியாததை, கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு செய்ததாக, விவசாயிகளிடையேயும், வரவேற்பு பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications