என் மீது தவறு இருந்தால் சிறையில் தள்ளுங்கள்: ஏழைகளுக்காக தொடர்ந்து போராடுவேன் - ராகுல் பேச்சு
டெல்லி: ஆட்சியும், அதிகாரமும் உங்கள் கையில் இருக்கிறது. எனக்கு எதிரான குற்றச்சாட்டு இருந்தால் என்னை சிறையில் தள்ளுங்கள் இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். நலிந்தோருக்காக தொடர்ந்து போராடுவேன் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 98-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் எனது பாட்டி ( இந்திரா காந்தி), எனது தந்தை, மற்றும் தாயார் மீது சேற்றை அள்ளி வீசுவதை நான் சிறுவயதில் இருந்தே பார்த்து வருகிறேன்.
மோடி இப்போது இந்தியாவின் பிரதமர். எனக்கு எதிராக வேறு வகையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகளில் ஒரு இம்மியளவு கூட உண்மையில்லை. ஆட்சியும், அதிகாரமும் உங்கள் கையில் இருக்கிறது. என் மீதான குற்றசாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி, அதில் உண்மையில் இருந்தால் என்னை சிறையில் தள்ளுங்கள் என்று சவால் விடுத்தார் ராகுல். உங்களுக்கு நெருக்கமானவர்கள் மூலம் என் மீதும் எனது குடும்பத்தினர் மீது சேற்றை வீசுவதை நிறுத்துங்கள். நீங்கள் தற்போது எதிர்கட்சியாக இல்லை. தற்போது நீங்கள் அரசாங்கத்தில் உள்ளீர்கள் என்றார்.
மேலும், இந்திரா காந்தி மக்களை ஒருங்கிணைக்க பாடுபட்டார். ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்போ மக்களை பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்றும் ராகுல் குற்றம் சாட்டினார். தன் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்த ராகுல் காந்தி, தனக்கு சிறிய பயம் கூட இல்லை என்றும், ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்காக தொடர்ந்து போராடுவேன் எனவும் தெரிவித்தார்.