பாதுகாப்பு வளையத்தை 100 முறை மீறிய ராகுல் காந்தி.. ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அவருக்கான பாதுகாப்பு வளையத்தை சுமார் 100 முறை மீறியதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பாதுகாப்பு வளையத்தை சுமார் 100 முறை மீறியதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார்.
குஜராத் மாநிலத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் அங்கு சென்றார். அப்போது, அவரது கார் மீது சிலர் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில் அவரது காரின் கண்ணாடிகள் உடைந்தன.
லோக்சபாவில் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார். அப்போது அவர் கூறுகையில் கார் கண்ணாடியின் மீது வீசப்பட்ட கல் ராகுல் மீது பட்டிருந்தால் அவர் உயிருக்கு ஆபத்தாகி இருக்கும்.
வீர மரணம் அடைந்த தியாகியின் மகன்
அவரை கொல்ல முயற்சிகள் நடைபெற்றுள்ளன. ராகுல் காந்தி வீரமரணம் அடைந்த ஒரு தியாகியின் மகன். அதனால் நாங்கள் பயப்படவில்லை. ஆனால், குஜராத்தில் ராகுல் காரை நோக்கி கல் வீசப்பட்ட சம்பவத்துக்கு பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும். அவருக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நிராகரிக்கப்பட்டதா? என்பதை நாம் ஆய்வு செய்தாக வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
ராகுல் காந்தி தேசிய தலைவர்
இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், ராகுல் காந்தி ஒரு தேசிய தலைவர். இந்த அவையின் மதிப்புக்குரிய ஒரு உறுப்பினரும் ஆவார். அவர் மதிப்புமிக்கவர். பாதுகாப்பை மீறுவது என்பது உயிருக்கு தீங்கை தேடிக் கொள்வதாகும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
121 முறை சுற்றுப்பயணம்
ராகுல் காந்தி கடந்த இரண்டாண்டுகளில் திட்டமிட்டும் திட்டமிடாமலும் 121 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். குண்டு துளைக்காத காரை தவிர்த்துவிட்டு சுமார் 100 முறை அவர் வெளியே சென்றுள்ளார். இந்த பாதுகாப்பு மீறல்கள் தொடர்பாக காங்கிரஸ் தலைமைக்கும் ராகுல் காந்திக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு சென்றது ஏன்?
ராகுல் காந்தி போலீஸார் மற்றும் சிறப்பு பாதுகாப்பு படையினரின் ஆலோசனைகளை பின்பற்றவில்லை. 6 முறை 72 நாட்கள் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் அவர் வெளிநாடுகளுக்கு சென்றார். பாதுகாப்பு படையினரை தவிர்த்து விட்டு வெளிநாடுகளுக்கு சென்றதன் மூலம் அவர் எதை மறைக்க முயன்றார்? என்பதை இந்த நாட்டுக்கும் நாடாளுமன்றத்துக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்றார் அவர்.