ஜம்மு காஷ்மீரில் கூட்டணியை உறுதி செய்யும் காங்.! ஓமர் அப்துல்லாவுடன் ராகுல் ஆலோசனை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகிறது. இன்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஓமர் அப்துல்லாவை சந்தித்து ராகுல் காந்தி பேசியிருக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் தேர்தல்: மக்களவை தேர்தல் சலசலப்பு தற்போதுதான் ஓய்ந்திருக்கும் நிலையில், மாநில சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் அதன் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, தற்போது தேர்தல் நடத்தப்படுவதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 90 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

அதாவது முதல் கட்ட தேர்தல் செப்.18ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் ஆக.20ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி நாள் ஆக.27ம் தேதி. அதேபோல ஆக.30 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.
2ம் கட்ட தேர்தல்: இரண்டாம் கட்ட தேர்தல் செப்.25ம் தேதி நடக்கிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் ஆக.29ம் தேதி தொடங்குகிறது. செப்.5ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். செப்.9 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.
3ம் கட்ட தேர்தல்: மூன்றாம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு அக்டோபர் மாதம் 1ம் தேதி நடக்கிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் செப்.5ம் தேதி தொடங்குகிறது. செப்.12ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். செப்.17 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். மூன்று கட்டங்களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாகின்றன.
இப்படி இருக்கையில் காங்கிரஸ் கட்சி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான தேர்தல் வார் ரூம் தலைவர்களை நியமித்திருந்தது. அதாவது ஜம்மு காஷ்மீரின் வார் ரூம் தலைவராக கோகுல் புட்டைல் நியமிக்கப்பட்டிருக்கிறார். தேசிய வார் ரூம் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த சசிகாந்த் செந்தில் மீண்டும் தொடர்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் நேற்று ஜம்மு காஷ்மீர் சென்றிருக்கின்றனர். இந்த பயணத்தின்போது கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைமை தெரிவித்திருந்தது. குறிப்பாக தொகுதி பங்கீடு விவகாரங்கள் இந்த பயணத்தின்போது பேசப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2014ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது காங்கிரஸ், ஜம்மு காஷ்மீர் மாநாட்டு கட்சி இணைந்து தேர்தலை எதிர் கொண்டது. இதில் காங்கிரஸ் 12 தொகுதிகளையும், தேசிய மாநாட்டு கட்சி 15 தொகுதிகளையும் கைப்பற்றியிருந்தது. இதனையடுத்து 2019ல், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.
இதனால் ஜம்மு காஷ்மீரின் அனைத்து கட்சிகளும் அதிருப்தியில் உள்ளன. இதை பயன்படுத்தி, இந்த முறை கூட்டணிக்குள் மக்கள் ஜனநாயக கட்சியையும் கொண்டுவர காங்கிரஸ் கணக்கு செய்திருக்கிறது. இதன் அடிப்படையில்தான் ராகுல், கார்கே பயணம் அமைந்திருக்கிறது. இன்று மதியம், தேசி மாநாட்டு கட்சி தலைவர் ஓமர் அப்துல்லாவை ராகுல் காந்தியும், கார்கேவும் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பில் தேசிய மாநாட்டு கட்சியுடன், காங்கிரஸ் தனது கூட்டணியை உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், தொகுதி பங்கீடு குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications