வெளி மாநிலத்தவரை விரட்டி அடிக்கும் பாஜக, சிவசேனா அரசுகள்: ராகுல் தாக்கு
டெல்லி: பாரதிய ஜனதா, சிவசேனா ஆளும் மாநிலங்களில் வெளி மாநிலத்தவர்கள் விரட்டி அடிக்கப்படுகின்றனர் என்று டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று தெற்கு டெல்லி அம்பேத்கார் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா கட்சியினர், உத்தர பிரதேசம் போன்ற வெளி மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டி அடிக்கிறார்கள்.
தலைநகர் டெல்லியிலோ அல்லது காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களிலோ, அனைத்து மாநில மக்களும் சகோதரர்களாக பழகி வருகின்றனர். ஆளும் அரசுக்கு எதிராக எத்தகைய கேள்விகளையும் கேட்கும் வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை காங்கிரஸ் நிறைவேற்றி இருக்கிறது.

இதன் மூலம் பெண்கள் உள்ளிட்ட பொது மக்களுக்கு அதிகாரங்கள் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளது. ஷீலா தீட்சித் ஆட்சியில், டெல்லி வரலாறு காணாத வளர்ச்சி அடைந்துள்ளது. டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையம் உலகிலேயே 2வது சிறந்த விமான நிலையமாக கருதப்படுகிறது.
மின் பற்றாக்குறை இருந்த டெல்லியில் தற்போது 24 மணி நேரமும் தாராளமாக மின்சாரம் கிடைக்கிறது. பாரதிய ஜனதா கூட்டணி அரசை விட, காங்கிரஸ் கூட்டணி நாடு முழுவதும் கூடுதல் கட்டமைப்பு வசதி திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அதனால் ஷீலா தீட்சித் 4வது முறையாக ஆட்சி நடத்துவதற்கு வாய்ப்பு கொடுங்கள் என்றார் ராகுல்.












Click it and Unblock the Notifications