ஆட்சியிலிருந்தபோது தப்புகள் நடந்தது... ஒப்புக் கொண்ட ராகுல் காந்தி!
குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, இதற்கு முன்பு செய்த தவறுகளால் கஷ்டப்பட்டு திருந்தியுள்ளதாக பேசியுள்ளார்.
அஹமதாபாத்: குஜராத்தில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி. இந்த வருடம் இறுதியில் நடக்க இருக்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்னோட்டமாக இந்த சுற்றுப்பயணம் பார்க்கப்படுகிறது.
இந்தச் சுற்றுப் பயணத்தில் ராகுல் காந்தி பல மக்களை சந்தித்து பேசி வருகிறார். அதே போல் இன்று மாணவர்கள் முன்னிலையில் அவர் பேசினார்.
இதற்கு முன்பு செய்த தவறுகளால் தான் சென்ற தேர்தலில் நாங்கள் தோல்வியுற்றோம். அந்தத் தோல்விகளால் மிகவும் கஷ்டப்பட்டு தற்போது திருந்தியுள்ளோம் என்று பேசினார்.

குஜராத்திற்கு அரசியல் பயணம்
குஜராத்தில் இந்த வருடம் இறுதியில் நடக்க இருக்கும் மாநிலத் தேர்தல் காரணமாக அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதற்கு முன்னோட்டமாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். காங்கிரசுக்கு 20 வருடமாக சிம்ம சொப்பனமாக திகழும் குஜராத்தில், வெற்றி பெறுவதை முக்கிய இலக்காக வைத்துள்ளது காங்கிரஸ் கட்சி. இதனால் அங்கு தீவிரமாக மக்கள் மத்தியில் பேசி வருகிறார் ராகுல் காந்தி.

அமித் ஷா பற்றி பேச்சு
இந்தப் பயணத்தில் பாஜவின் அனைத்து தலைவர்களையும் பற்றி பேசிய ராகுல் காந்தி அமித் ஷா குறித்தும் பேசினார். அமித் ஷாவின் மகன் ஜெய் அமித் மீது தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அவர் பேசிய கருத்து இந்தியா முழுக்க வைரல் ஆனது. மேலும் அவர் 'நான் பாஜகவை அழிக்க நினைக்கவில்லை , பாஜகவை அகற்ற மட்டுமே நினைக்கிறேன்" என்று கூறியிருந்தார்.

உண்டான வார்த்தைப் போர்
பாஜக கட்சியை ராகுல் காந்தி தொடர்ந்து தாக்கிப் பேசி வந்ததால் , இரண்டு கட்சிகளுக்கும் இடையில் வார்த்தப் போர் தொடங்கியது. இவரது கருத்துக்கு அமித் ஷா எதிர் கருத்து தெரிவித்தார் 'இத்தாலியின் கண்ணாடியை அணிந்து அவர் இந்தியாவைப் பார்க்கிறார் , அவருக்கு எல்லாம் இப்படித்தான் தெரியும்' என்று பேசியிருந்தார். அதே போல் ராகுல் காந்தியின் கருத்துக்கு ஸ்மிரிதி ராணியும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

தவறுகளால் திருந்தியுள்ளோம்
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தவறுகள் குறித்து பேசிய ராகுல் காந்தி "ஆட்சியில் இருக்கும் போது நாங்கள் சில தவறுகள் செய்துவிட்டோம். நான் அந்தத் தவறுகளை எல்லாம் எண்ணி பலமுறை வருந்தியுள்ளேன். அதன் மூலமாக கஷ்டப்பட்டு இப்போதுதான் திருந்தியுள்ளோம்" என்று அவர் ஒப்புக் கொண்டார். ராகுல் காந்தியின் இந்த வெளிப்படையான பேச்சு இந்தியா முழுக்க வைரல் ஆனது.












Click it and Unblock the Notifications