எதைக்கேட்டாலும் காங்கிரஸை குற்றம்சாட்டுவதே மோடியின் பதிலாக இருக்கிறது: ராகுல் காந்தி
எதைக்கேட்டாலும் காங்கிரஸை குற்றம்சாட்டுவதே மோடியின் பதிலாக இருக்கிறது என்று ராகுல் காந்தி குறிப்பிட்டு உள்ளார்.
பெங்களூரு: தேர்தல் வாக்குறுதிகள், நாட்டின் நிதி நிலை என எதைப்பற்றி கேட்டாலும் காங்கிரஸை குற்றம்சாட்டுவதே மோடியின் பதிலாக இருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குறிப்பிட்டு உள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தற்போது அங்கு முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. தற்போது முதலே அங்கு தேர்தல் பிரச்சாரம் களை கட்ட ஆரம்பித்து உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அங்கு நான்கு நாள் பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அங்கு கொப்பல் மாவட்டத்தில் குஸ்டகி எனும் இடத்தில் நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, கர்நாடகத்தில் 2008 முதல் 2013ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த பாஜக அரசு, ஊழலில் உலக சாதனை படைத்தது. அப்போது எடியூரப்பா, சதானந்தகவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகிய மூன்று முதல்வர்களை இந்த மாநிலம் கண்டது. ஊழல் புகாரில் 4 மந்திரிகள் பதவியை இழந்து சிறைக்கு சென்றனர்.
ஆனால் பிரதமர் மோடி கர்நாடகத்திற்கு வந்து ஊழல் ஒழிப்பு பற்றி பேசுகிறார். இதுவே மிகவும் முரணாக உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். சொன்னபடி எந்தத் துறையிலும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை.
வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை கொண்டு வந்து மக்கள் வங்கிக்கணக்கில் 15 லட்ச ரூபாய் டெபாசிட் செய்ய இருப்பதாக அறிவித்தார்கள். இப்போது வரை அதுபற்றி அவர்கள் வாய் திறக்கவில்லை. மாறாக எதைக் கேட்டாலும் அதற்கு காங்கிரஸை குற்றம்சாட்டுவதையே வேலையாக வைத்து இருக்கிறார்கள் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டு உள்ளார்.