இனி எரிபொருள் விலைக்கு ஏற்ப ரயில் கட்டணம் உயரும்!
டெல்லி: எரிபொருள் விலை உயர்வுக்கு தக்கபடி ரயில் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கச்சா எண்ணை விலை உயர்வுக்கு தக்கபடி பெட்ரோல், டீசல் விலை உயர்வதை போல இனிமேல் டீசல், நிலக்கரி, மின்சார கட்டணத்துக்கு ஏற்ப ரயில் கட்டணமும் கழுத்தை நெரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
மத்திய ரயில்வே அமைச்சர் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் இதுகுறித்து கூறியதாவது:
ரயில்வே இழப்பில் உள்ளதால், எரிபொருள் விலைக்கு ஏற்ப பயணிகள் கட்டணத்தை மாற்றியமைக்க வகை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பு நடுத்தர வர்க்கத்து மக்கள் வயிற்றில் புளியை கரைப்பதாக உள்ளது. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த எரிபொருள் விலையை கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது ஆயில் நிறுவனங்கள் கட்டுப்பாட்டுக்கு மாற்றினர். இதன் மூலம் சர்வதேச கச்சா எண்ணை விலையேற்றத்துக்கு தக்கபடி, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கிறது.
இதனால் மாதம் ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையேற்றம் கண்டு மக்களை வாட்டி வருகிறது. இந்நிலையில் எரிபொருள் விலைக்கு ஏற்ப ரயில் கட்டணங்களை நிர்ணயித்தால், ரயில் கட்டணமும், நாளொரு மேனியும், பொழுதொருவண்ணமுமாக அதிகரிக்கும். எரிபொருள் விலையை கட்டுப்படுத்தும் உரிமையே அரசிடம் இல்லை எனும்போது, அதனுடன் ரயில் கட்டணத்தை இணைப்பது என்பது, ரயில்வே துறையை கிட்டத்தட்ட தனியார் மயமாக்கியதற்கு சமம்தான்.