25 ஆண்டுகள்.. 10 மாதங்கள்.. உலகிலேயே அதிக ஆண்டுகள் வாழ்ந்த ‘ராஜா’.. மறைந்தது இந்தியாவின் பெருமை!
உலகிலேயே அதிக ஆண்டுகள் வாழ்ந்த புலியான ராஜா மேற்கு வங்கத்தில் உயிரிழந்தது.
கொல்கத்தா: உலகிலேயே அதிக ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாகக் கருதப்படும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராஜா என்கிற புலி உயிரிழந்துள்ளது.
அழகும், கம்பீரமும், மிரட்டும் உறுமலும் என பார்த்தாலே பிரமிப்பை ஏற்படுத்துகிற விலங்கு புலி. இது இந்திய தேசிய விலங்கு என்ற பெருமைக்கு உரியது. நம் நாட்டில்தான் உலகிலேயே அதிக நாட்கள் வாழ்ந்தது என்ற பெருமைக்குரிய ராஜா என்கிற புலி மேற்கு வங்கத்தில் இருந்தது.
மொத்தம் 25 ஆண்டுகள் 10 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் உயிர் வாழ்ந்த இந்தப் புலியானது, அங்குள்ள ஒரு மீட்பு மையத்தில் நேற்று அதிகாலை உயிரிழந்தது.

ராயல் பெங்கால் டைகர்
ராயல் பெங்கால் டைகர் இனத்தைச் சேர்ந்த இந்தப் புலியானது கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வடக்கு வங்காளத்தில் உள்ள ஜல்தபாராவில் உள்ள கைராபரி சிறுத்தைப்புலி மீட்பு மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அதற்கு வயது 11 ஆகும். உலகின் மிகப்பெரிய சதுப்புநில டெல்டாவான சுந்தர்பன்ஸில் இருந்து காலில் காயத்துடன் அது மீட்கப்பட்டது.

காயத்துடன் மீட்பு
முதலை ஒன்று ராஜா புலியின் வலது பின்னங்காலைக் கடித்ததால், அது வடக்கு வங்காளத்தில் உள்ள மீட்பு மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. சிகிச்சைக்குப் பின் தொடர்ந்து அங்கேயே கடந்த 15 ஆண்டுகளாக அந்தப் புலி வாழ்ந்து வந்தது. உலகிலேயே அதிக நாட்கள் உயிர் வாழ்ந்த புலியாக இது கருதப்படுகிறது.

அமைச்சர் இரங்கல்
ராஜா புலியின் மறைவு குறித்து இந்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் டிவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், "உலகிலேயே அதிக வயதான புலியான ராஜா உயிரிழந்தது குறித்து கேள்விப்பட்டு வருத்தமடைந்தேன். இந்தியாவின் பெருமையாக 25 ஆண்டுகள் வாழ்ந்தது ராஜா. நிச்சயம் ராஜாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது" எனத் தெரிவித்துள்ளார்.

எம்.பி மோகன் இரங்கல்
இதேபோல், கர்நாடகாவைச் சேர்ந்த எம்.பி. மோகன் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், "பொதுவாக புலிகள் 18 ஆண்டுகள் மட்டுமே வாழக்கூடியவை. ஆனால் ராஜா புலி 25 வாழ்ந்துள்ளது. நிச்சயம் இந்தியாவின் பெருமையாக ராஜாவைக் குறிப்பிடலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

வனவிலங்கு ஆர்வலர்கள் சோகம்
ராஜா புலியின் உடலுக்கு வனத்துறை அதிகாரிகள் பலர் நேரிலும், சமூகவலைதளங்கள் வாயிலாகவும் அஞ்சலி செலுத்தினர். ராஜா புலியின் மரணம் குறித்து அறிந்த புலிகள் மற்றும் வன வாழ்க்கை ஆர்வலர்கள், சமூகவலைதளங்கள் வாயிலாக தங்களது சோகத்தையும், இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் பெருமைகளுள் ஒன்றாக விளங்கிய ராஜா புலியின் மரணம் வனவிலங்கு ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications