மக்களை பதற்றத்தில் வைத்துள்ளார் மோடி.. பாஜக, ஆர்எஸ்எஸ்ஸால் ஜனநாயகத்துக்கு ஆபத்து! சோனியா ஆவேச உரை
ஜெய்ப்பூர்: ‛‛பிரதமர் நரேந்திர மோடி, பாஜக, ஆர்எஸ்எஸ்ஸால் நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சிறுபான்மையினர்கள் குறிவைக்கப்பட்டு பயத்துடன் வாழும் நிலை உள்ளது. இதனால் வளர்ந்து வரும் பிரிவினைவாத வைரஸை எதிர்த்து போராட வேண்டும்'' என காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பேசினார்.
இந்தியாவில் ஒரு காலத்தில் மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சியை பிடித்து மக்களின் அமோக ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி இருந்தது. சமீபகாலமாக மக்களிடம் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதை உறுதி செய்யும் வகையில் தான் சமீபத்தில் நடந்த உத்தர பிரதேசம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் அமைந்தன. இந்த தேர்தலின்போது பஞ்சாப்பில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்க முடியாமல் தவித்தது.
காங்கிரஸ் தலைவர் யார்..? “இப்பவே முடிவெடுங்க” - பரபரப்பைக் கிளப்ப மூத்த தலைவர்கள் திட்டம்!?
காங்கிரஸ் தீவிரம்
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு, கட்சியை பலப்படுத்துவது பற்றி இந்தியாவில் உள்ள கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டது.
சிந்தனையாளர் மாநாடு
அதன்படி இன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிந்தனையாளர் மாநாடு(சிந்தன் சிர்வீர்) இன்று துவங்கியது. 3 நாள் நடக்கும் இந்த மாநாட்டில் ராகுல்காந்தி உள்பட கட்சியின் மூத்த தலைவர்களும், ஜம்மு காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரையிலான காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.
சோனியா காந்தி பேச்சு
இந்த மாநாட்டில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இன்று துவங்கிய மாநாட்டை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி துவங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். சோனியா காந்தி பேசியதாவது:
ஆபத்து நிலையில் நாடு
"அதிகபட்ச ஆட்சி நிர்வாகம், குறைந்தபட்ச அரசு" என்ற முழக்கத்தில் செயல்படும் பிரதமர் நரேந்திர மோடியும், அவரது சகாக்களும் உண்மையில் எதை குறிப்பிடுகின்றனர் என்பது தெளிவாக புரிகிறது. பதற்றமான நிலையில் நாட்டை வைத்து மக்களை வாழ கட்டாயப்படுத்து தான் இதன் நோக்கமாக உள்ளது. இவர்களின் செயல்பாடு நாட்டை ஆபத்து நிலைக்கு தள்ளுகிறது.
ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்
மேலும் இந்தியாவின் ஜனநாயகத்துக்கும், பன்முகத்தன்மைக்கும் மிகப்பெரிய அச்சுறுதல் ஏற்பட்டுள்ளது. நமது சமூகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகவும், நமது குடியரசு நாட்டின் சமமான குடிமக்களாகவும் உள்ள சிறுபான்மை மக்களை குறிவைத்து அவர்களை தொடர்ந்து பயம், பாதுகாப்பற்ற நிலையில் வைக்கின்றனர். இது மிகவும் கொடூரமானது.
பிரிவினைவாத வைரஸ்
நாட்டில் வெறுப்புணர்வு எனும் நெருப்பு பற்ற வைக்கப்பட்டுள்ளது. இது நிறைய மக்களின் வாழ்க்கையை பாதிக்கிறது. மேலும் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு தீவிரமான சமூக விளைவுகளை ஏற்படுத்துகிறது. வளர்ந்து வரும் இந்த பிரிவினைவாத வைரஸை எதிர்த்து போராட வேண்டும். பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் கொள்கைகளின் விளைவாக நாடு எதிர்கொள்ளும் எண்ணற்ற மோசமான சவால்களை விவாதிக்க இந்த கூட்டம் வழிவகுக்கும்.
கட்சியில் மாற்றங்கள் தேவை
நமது கட்சியின் அமைப்பில் மாற்றங்கள் தேவை. நமது பணி முறையை மாற்றம் செய்ய வேண்டும். நாம் தனிப்பட்ட லட்சியங்களை விட அமைப்பு ரீதியாக இலக்குகள் வைத்து செயல்பட வேண்டும். கட்சி ஒவ்வொருவருக்கும் நிறைய கொடுத்துள்ளது. இதனால் கட்சிக்கு நீங்கள் திரும் செலுத்த வேண்டிய நேரம் இது'' என்றார்.