ராஜஸ்தான் தொழிற்சாலையில் மோசமான தீவிபத்து.. 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் டர்பெண்டைன் எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட மோசமான தீவிபத்தில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம், ஜாம்வா ராம்கர் பகுதியில் டர்பெண்டைன் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இங்குச் சிறியளவில் பெயின்டகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இத்தொழிற்சாலையில் நேற்று பிற்பகல் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதை கண்டதும் அங்கிருந்த தொழிலாளர்கள் உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், அதற்குள் இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த 3 குழந்தைகளும் இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தொழிலாளர்களின் குழந்தைகள் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்த விபத்தில் காயமடைந்த இருவர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தத் தீவிபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications