காதலர் தினத்தன்று பெற்றோர்களுக்கு மரியாதை... புதிய நிகழ்ச்சிக்கு தயாராகும் ராஜஸ்தான் அரசு பள்ளிகள்
காதலர் தினத்தன்று பள்ளிகளில் மதா பிதா பூஜன் சம்மன் சமோரா என்ற நிகழ்ச்சியை நடத்த ராஜஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது.
ஜெய்ப்பூர்: காதலர் தினத்தன்று பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து, அவர்களுக்கு மரியாதை செலுத்தும் மாதா பிதா பூஜன் சம்மன் சமோரா நிகழ்ச்சியை நடத்த ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும் அன்றைய தினம் காதலர்கள் தங்கள் காதலை பரிசுகள் கொடுத்து கொண்டாடி வருகின்றனர்.
ஆனால், இதற்கு இந்துத்வா அமைப்புகள் பல கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. சில இடங்களில் காதலர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் கூட அரங்கேறுகின்றன.
இந்நிலையில், பாஜக ஆளும் ராஜஸ்தானில் பள்ளிகளில் காதலர் தினத்தை வேறு வகையில் கொண்டாட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அம்மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வசுதேவ் தேவ்னானி சட்டசபையில், 'மதா பிதா பூஜன் சம்மன் சமோரா (பெற்றோரை வணங்குதல் மற்றும் மரியாதை செலுத்துதல்) முறை இனி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதி மாநிலம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் கடைபிடிக்கப்படும்’ என அறிவித்துள்ளார்.
'மாணவர்கள் இன்னொருவரின் மீது காதல் கொள்வதற்கு முன்பாக தங்களது பெற்றோரின் மீது காதல் கொள்ளவேண்டும்’ என்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய காரணம். ஏற்கனவே இதேபோன்ற நிகழ்ச்சிகள் சட்டீஸ்கரில் வழக்கத்தில் உள்ளது’ எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
ஏற்கனவே, பல சர்ச்சைகளில் சிக்கியவர் அமைச்சர் வசுதேவ் தேவ்னானி என்பது குறிப்பிடத்தக்கது.