பாதுகாப்பு வாகனங்களின் சாவியை பறித்து சாக்கடையில் வீசினார் ராஜிவ்காந்தி: மாஜி உள்துறை செயலாளர்
டெல்லி: அதிகப்படியான பாதுகாப்பு வாகனங்கள் பின்தொடர்வதை விரும்பாதவர் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி என்றும், ஒரு நாள் பாதுகாப்பு வாகன கார்களின் சாவியை பிடுங்கி சாக்கடை தண்ணீரில் வீசி எறிந்தவர் என்றும் மத்திய முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.டி.பிரதான் தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.
1985ம் ஆண்டு முதல் சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் உள்துறை செயலாளராக பதவி வகித்தவர் பிரதான். இவர் 'ராஜிவ் மற்றும் சோனியாவுடன் எனது வருடங்கள்' என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் சில சுவாரசிய சம்பவங்களை விவரித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:
பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுப்பு
1985ம் ஆண்டு ஜூன் 30ம்தேதி, ஒரு மழைக்காலத்தில், பிரதமர் ராஜிவ்காந்தி மற்றும் சோனியா காந்தி ஒரு காரில் தங்களது வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அவர்களுக்கு பின்னால் வரிசையாக பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்து சென்றன.
வாகனங்களை நிறுத்து
சற்று பின்னால் திரும்பி பார்த்த ராஜிவ்காந்தி வால் பிடித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து போலீஸ் அதிகாரி ஒருவரை அழைத்து, எனது பின்னால் இந்த வாகனங்கள் வரக்கூடாது என்று கட்டளையிட்டார்.
சொல்பேச்சு கேட்கவில்லை
ஆனால் அந்த அதிகாரிக்கு பிரதமர் என்ன சொன்னார் என்பது விளங்கவில்லை போலிருக்கிறது. ஏனெனில், பிரதமர் உத்தரவுக்கு பிறகும்கூட கேட்காமல், வாகனங்கள் பின்னால் தொடர்ந்து சென்றன.
சாவியை பறித்தார்
ராஜாஜிமார்க் பகுதியில் கார்கள் சென்றபோது, பிரதமர் தனது காரை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறினார். கார் நின்றதும், பின்னால் வந்த வாகனங்களும் வரிசையாக நின்றன. கொட்டும் மழையை பொருட்படுத்தாது, காரில் இருந்து இறங்கிய ராஜிவ்காந்தி , பாதுகாப்புக்கு வந்த ஆறு வாகனங்களின் சாவியையும் உருவி எடுத்தார்.
சாக்கடையில் எறிந்தார்
இதன்பிறகு சாலையோரம் ஓடிக்கொண்டிருந்த சாக்கடை கால்வாயில் அந்த சாவிகளை எறிந்துவிட்டு தனது காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவத்தால் போலீஸ் அதிகாரிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்த நேரம்பார்த்து வயர்லெஸ் மூலமும், பிரதமர் காரை தொடர்பு கொள்ளமுடியவில்லை. நடு ரோட்டில் கொட்டும் மழையில் போலீசார், கையை பிசைந்தபடி நின்று கொண்டிருந்தனர்.
பதற்றம் தணிந்தது
பிரதமர் எங்கு சென்றார் என்று தெரியாமல் பதைபதைத்துக் கொண்டிருந்த நேரத்தில், பதினைந்து நிமிடங்கள் கழித்து, பிரதமர் தனது வீட்டுக்கு சென்று சேர்ந்துவிட்டார் என்ற தகவல் வெளியானது. அதன்பிறகுதான் போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அதே நாள் மாலையில், பாதுகாப்பு ஊழியர்களுக்கு சொல்லாமல் ஜீப்பை எடுத்துக்கொண்டு அவரே நாடாளுமன்றம் அருகேயுள்ள விஜய்சவுக் வரை வந்தார்.
இவ்வாறு தனது புத்தகத்தில் பிரதான் தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தியின் எளிமையை தெரியப்படுத்துவதற்காக இந்த சம்பவங்களை அவர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.