இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ்.ஆதரவாளர்கள் 67 பேர் கைது: ராஜ்நாத் சிங்
இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ். ஆதரவாளர்கள் 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத்: இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஐ.எஸ். ஆதரவாளர்கள் 67 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
மாநில போலீஸ் டி.ஜி.பி.க்களின் 3 நாள் மாநாடு தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் இன்று மாலை தொடங்கியது. இந்த மாநாட்டில் எல்லை தாண்டிய பயங்கரவாதம், ஊடுருவல், பிரிவினைவாதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

இந்த மாநாட்டை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: ஐஎஸ் தீவிரவாத இயக்கம் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிற்கும் அவர்கள் பெரும் சவாலாக உள்ளனர். நாம் அனைவரும் ஒருங்கிணைந்தால் தீவிரவாதிகளின் சவாலை முறியடிக்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ்.ஆதரவாளர்கள் 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பது தெரியவந்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசுடன் மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பிரதமர் மோடி தொலைக்காட்சியில் ரூ 500 ,1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் தீவிரவாதிகள் முடங்கி போயுள்ளனர். நக்சலைட்டுகள் அதனைச் சார்ந்த சில அமைப்புகள் பழைய நோட்டுகளை கொடுத்து புதிய நோட்டுகளை மாற்ற முயற்சி செய்கின்றனர். நாம் அதனை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications