அயோத்தியில் அடுத்த ஆண்டு ராமர் கோவில் கட்டுவோம்.... சர்ச்சை சாத்வி பிராச்சி
மீரட்: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என்று சர்ச்சைக்குரிய விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் சாத்வி பிராச்சி கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகளில் இந்துத்துவா அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத் தீவிரமாட்டி வருகிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, சிக்னல் காட்டிவிட்டதாகவும் அந்த அமைப்பினர் கூறி வருகின்றனர்.
இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அயோத்தியில் அடுத்த ஆண்டு ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்ச்சைக்குரிய தலைவர் சாத்வி பிராச்சி கூறியுள்ளார்.
மீரட்டில் செய்தியாளர்களிடம் சாத்வி பிராச்சி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான கற்கள் தயாராக உள்ளன. ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் 2017ஆம் ஆண்டு தொடங்கும்.
அயோத்தியில் கோவில் கட்டுவதற்கு ரூ10 லட்சம் நன்கொடை தருவதாக சமாஜ்வாடி கட்சியின் புக்கால் நவாப் கூறியிருப்பது விளம்பரத்துக்காகத்தானே தவிர வேறு எதுவும் இல்லை என்றார்.