வெள்ளத்திற்கு பிறகு இப்படி ஒரு ஆபத்து: கேரளாவில் வேகமாக பரவும் எலிக்காய்ச்சல்.. 19 பேர் பலியான சோகம்
திருவனந்தபுரம்: தண்ணீரில் பரவும் வியாதிகளால் கேரளா இப்போது தத்தளித்து வருகிறது.
திருவனந்தபுரம்: தண்ணீரில் பரவும் வியாதிகளால் கேரளா இப்போது தத்தளித்து வருகிறது.
கேரளாவில் வரலாறு காணாத மழை, வெள்ளம் மக்களை வாட்டி வதைத்தது. இந்த பிரச்சினையில் இருந்து மக்கள் இப்போதுதான் வெளியே வந்து வீடு திரும்பியுள்ள நிலையில், அவர்கள் பல்வேறு நோய்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
அதில் முக்கியமானது எலிக்காய்ச்சல். இதன் அறிவியல் பெயர் leptospirosis என்பதாகும்.
சுமார் 400 பேர் பாதிப்பு
இந்த நோய் கேரளாவிற்கு புதிது கிடையாது. ஜனவரி முதல் ஜூலை வரையில் 28 பேர் எலிக்காய்ச்சலால் கொல்லப்பட்டிருந்தனர். ஆனால், வெள்ள சேதத்திற்கு பிறகு இக்காய்ச்சல் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் முதல் இதுவரை 372 எலிக்காய்ச்சல் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அதில் 19 பேர் பலியாகியுள்ளனர்.
எப்படி பரவும்
எலிக்காய்ச்சல் என்பது, பேக்டீரியா வகை நோயாகும். பாதிக்கப்பட்ட விலங்கு சிறுநீர் மண்ணில் பட்டதும், அதிலிருந்து மக்களுக்கு பரவக்கூடும். இந்த பேக்டீரியா உடலிலுள்ள, தோல் வெடிப்பு போன்ற துவாரங்கள் வழியாக உடலுக்குள் நுழைந்துவிட கூடியது.
அறிகுறிகள் என்ன
எலிக்காய்ச்சலுக்கு தலைவலி, தசை வலி, மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு போன்றவை அறிகுறிகளாகும். சில அறிகுறிகள் வேறு பல வியாதிகளுக்கும் இதேபோன்றுதான் இருக்கும் என்பதால் மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வதை தவிர்த்து விடுகிறார்கள்.
பாதிப்புகள்
எலிக்காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கப்படவில்லை என்றால், கிட்னி சேதமடைவது, முதுகு தண்டுவடம், மூளையில் பாதிப்பை ஏற்படுத்துவது, கல்லீரல் பாதிப்பு, மூச்சுகுழாய் பிரச்சினை போன்றவற்றை ஏற்படுத்தும். சில நேரங்களில் மரணத்திற்கு காரணமாகிவிடும் இந்த வியாதி.
தடுப்புமுறைகள்
நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, பாக்டீரியா பாதித்த மணல், தண்ணீரில் உடல்படாதவாரு தவிர்க்க வேண்டும். தடுப்பு ஷூ அல்லது ஆடைகளை அணிய வேண்டும். இதனிடையே மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா அளித்த பேட்டியொன்றில், மக்கள் அச்சப்பட வேண்டாம். நோய் பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்றார். கேரளாவிலிருந்து தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு வருவோர் மூலம் பிறருக்கும் இந்த நோய் பரவக்கூடும் என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இதை சுகாதாரத்துறை தெளிவுபடுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.